கணபதிப்பிள்ளை உதயகாந்தனின் கொலைக்குக் காரணம் தனிப்பட்ட பிரச்சினைதான் எனக்கூறப்பட்ட போதிலும், அதன் பின்னணியில் இனம்தெரியாத ஆயுதக்குழு ஒன்று சம்பந்தப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான இவரின் சடலம் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டமை தெரிந்த்தே.அவரின் சடலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திறப்பும் தலைக்கவசமும் கண்டெடுக்கப்பட்டன. அதேவேளையில் அவர் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் சிம் அட்டையும் செயலிழந்த நிலையில் அங்கு இருந்தன.
சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர் அவரின் மோட்டார் சைக்கிள் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் இருந்து பம்பலப்பிட்டி பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லாறைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை உதயகாந்தன் (38 வயது) விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலராக 2000 ம் ஆண்டு தொடக்கம் 2004 ம் ஆண்டு வரை பணியாற்றியவராவார்.
இதன் பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் இவரது சடலம் பம்பலப்பிட்டியில் வீசப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யன் வெலிக்கந்தையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment