முன்னாள் முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை நாடகம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக சாடியுள்ளார். ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ்வின் உண்ணாவிரதம் அரசியல் ஆக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மவுண்ட்ரோடு மின் வாரிய அலுவலகம் பின் புறம் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார்.முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தி.மு.க.வையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையாக தாக்கி பேசினார்.. அவர் பேசியதாவது:
தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் வகையில் இந்த உண்ணாவிரதம் அமைந்துள்ளது. காங்கிரசை இனி இளைஞர்கள் தான் வழி நடத்த வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகும் அதை மேலிடம் இன்னும் ஏற்காமல் இருப்பது ஏன் என்று தெரிய வில்லை.
தலைவர் இல்லாத கட்சி என்பதால் எது வேண்டுமானாலும் யாரும் எங்களை பேச முடியாது. இந்த உண்ணாவிரதத்தில் திரளாக பலர் பங்கேற்றுள்ளனர். சிலர் காலை உணவு சாப்பிட்டு விட்டு கடற்கரை ரோட்டில் உண்ணாவிரதம் இருந்துவிட்டு மதிய சாப்பாடு வேளை வந்ததும் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்ட சம்பவமும் உண்டு. அது போல் இந்த உண்ணாவிரதம் கிடையாது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் தி.மு.க.தான். கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்வது யாரை பார்த்து? காங்கிரசை பற்றி வீரமணி, ராம்தாஸ், திருமாவளவன் தைரியமாக விமர்சனம் செய்து பேசுகிறார்கள். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி என்ன சொல்ல வருகிறார் என்று தெளிவாக தெரியவில்லை. தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் அதிக சீட் பெற்றது தான் காரணம் என்று சொல்ல முடியாது என்கிறார். சொல்வதை தெளிவாக சொல்லுங்கள். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.


No comments:
Post a Comment