
செங்கல்பட்டு பூந்தமல்லி பகுதிகளில் 'சிறப்பு முகாம்' என்ற பெயரில், வழக்கு முடிந்த பின்னரும் கூட சிறைபடுத்தி வைத்திருக்கும் தமிழீழத் தமிழர்களை, தமிழக அரசே ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு தந்தி கொடுக்கும் போராட்டம் சென்னையில் இன்று (19.06.2012) நடைபெற்றது.
கடந்த மாதம் தங்களை விடுவிக்கக் கோரி செங்கல்பட்டு முகாம் சிறைவாசிகளான ஈழத்தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாப்போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்த தமிழக அரசு, இம்மாதம் 15.06.2012) அன்று சிறைவாசிகளை படிப்படியாக விடுதலை செய்வதாக ஒத்துக் கொண்டது. ஆனால், 15.06.2012 அன்று கடந்த பின்னரும் கூட யாரும் விடுதலை செய்யப்படவில்லை.
தமது வாக்குறுதியைக் கைவிட்ட தமிழக அரசைக் கண்டித்து, தற்போது மீண்டும் செங்கல்பட்டு முகாம் சிறைவாசிகள் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தற்போது, 5வது நாளாக சாகும் வரையிலான உண்ணாப்போராட்டத்தை 7 பேர் மேற்கொண்டுள்ளனர். 4ம் நாளிலிருந்து உண்ணாநிலையில் இருந்து வரும் சதீஷ் குமார், பாரபரன் மற்றும் மதன் ஆகியோரது உடல் நிலை மோசமாகி சோர்வாக காணப்படுகின்றனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்தும், தமிழக அரசு தமது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியும் சென்னையில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடி தமிழக அரசுக்கு அவசரத் தந்திகளை அனுப்பும் போராட்டத்தை, சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் இன்று 19.06.2012 காலை 10.30 மணியளவில் நடத்தினர்.
பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உணர்வாளர்களும் இதில் திரளாக பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கட்சியின் தலைவர் பெ.மணியரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் கவிஞர் கவிபாஸ்கர், மகளிர் ஆயம் பொறுப்பாளர் ம.இலட்சுமி, எழுத்தாளர்கள் வான்முகில், அமரந்தா, புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.
'விடுதலை செய் விடுதலை செய்! அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்' என்பன உள்ளிட்ட முழக்கங்கள் அஞ்சலக வாயிலில் தோழர்களால் முழங்கப்பட்டன. தமிழக முதல்வருக்கு கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான தந்திகள் அனுப்பப்பட்டன. வரும் வெள்ளி(22.06.2012) அன்று செங்கல்பட்டு முகாம் முன் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும் தலைவர்கள் கூட்டாகத் தீர்மானித்தனர்.


No comments:
Post a Comment