நான் ராஜாவாகப் போகிறேன் - இது விரைவில் வரவிருக்கிற ஒரு படத்தின் தலைப்பு.
உதயம் வி.எல்.எஸ். சினி மீடியா சார்பில் கே.தனசேகர், வி.சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகனாக நகுல், நாயகியாக சாந்தினி நடிக்கின்றனர்.
நிஷாந்த், கவுரவ், மணிவண்ணன், சுரேஷ், ஏ.வெங்கடேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லிகணேஷ், மயில்சாமி, அவனிமோடி, கஸ்தூரி, ஆர்த்தி, வனிதா விஜயகுமார் என பெரிய பட்டாளமே இதில் உண்டு.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிருத்வி ராஜ்குமார் இயக்குகிறார். வின்னர் படத்தில் சுந்தர் சியுடன் பணியாற்றியவர். பின்னர் வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்து பொல்லாதவன் படம் செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் பிருத்வி ராஜ்குமார் கூறுகையில், "இது ஒரு அரசியல் ஆக்ஷன், திரில்லர். பரபரவென இருக்கும் திரைக்கதை பார்ப்பவர்களை இருக்கை நுனிக்கே கொண்டுவந்துவிடும்.
கதையின் முடிச்சு இதுதான்... அடுத்த பதினைந்து வருடம் கழித்து மக்கள் பயனடையும் வகையில் தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்றும்படி குரல் கொடுத்து பிரச்சாரம் செய்வர் மணிவண்ணன். அவர் கருத்துக்களை சாந்தினி பின்பற்றினார். இதனால் மணிவண்ணனுக்கு பிரச்சினைகள் உருவாகி அது சாந்தினியையும் பாதிக்கிறது.
சாந்தினியை காதலிக்கும் நகுலையும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது கதை. நகுல், ஐ.டி. படிக்கும் மாணவராகவும், சாந்தினி சட்டக் கல்லூரி மாணவியாகவும் வருகிறார்கள். மணிவண்ணனுக்கு மிக முக்கிய வேடம்.
இயக்குநராக இது எனக்கு முதல் படம். ரொம்ப வித்தியாசமான படம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. படம் பார்த்தால் வித்தியாசத்தை உணர்வீர்கள்.
இந்தப் படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதித் தர விரும்பி ஒப்புக் கொண்டார். அது எனக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.
ஜீவி பிரகாஷ் இசையமைக்கிறார், ஆர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற கிஷோர் எடிட்டிங்கை கவனிக்கிறார்.. முதல் பட இயக்குநரான எனக்கு முன்னணி கலைஞர்கள், டெக்னீஷியன்கள் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.
No comments:
Post a Comment