சலனப்படுத்தாத பேச்சு, துருதுரு செயல்பாடு, அழகான உச்சரிப்பு, எப்போதும் சிரித்த முகம். இவற்றுக்குச் சொந்தமானவர் சின்ன சின்ன ஆசை நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆர்த்தி. சின்னச் சின்ன ஆசை நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் சாட் பூட் த்ரி ஆடிக்கொண்டிருந்தார். தினந்தோறும் அடுத்தவரின் ஆசையை நிறைவேற்றும் ஆர்த்தியின் ஆசையை நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
"நான் பாரதி கல்லூரியில் எம்.ஏ., பிசினஸ் எக்னாமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது முழுக்கமுழுக்கத் தமிழில் தொகுத்து வழங்க தொகுப்பாளினி வேண்டும் என்ற மக்கள் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். என் திறமைகளுக்கு மதிப்பு அளித்து இந்த வாய்ப்பை அளித்தார்கள். ஆரம்பத்தில் படித்துக்கொண்டே தொகுத்து வழங்கி வந்த நான் தற்போது முழுநேர தொகுப்பாளினி. எனது கல்லூரி நாட்களில் நானே நாடகங்களை இயக்கி நடித்ததால் மேடை அச்சமின்றி பேசக்கூடிய திறமை உள்ளது. அந்தத் திறமை எனக்குப் பேருதவியாக உள்ளது
சின்னச் சின்ன ஆசை நிகழ்ச்சியை குழந்தைகள் தினத்தன்று வெறும் அரை மணிநேர நிகழ்ச்சியாக நாங்கள் தயாரித்த போதிலும், பார்வையாளர்களின் அதிக வரவேற்பு கிடைத்ததால் வாரந்தோறும் நிகழ்ச்சியாக மாறியது. இதன் மூலம் பெரும்பாலான குடிசைகளைச் சேர்ந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றணும். என்னுடைய ஆசையை நிறைவேற்றவில்லை என்று ஒரு குழந்தைகூட சொல்லக்கூடாது என்பதில் எங்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் உறுதியாக உள்ளனர்.
மற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்றால், பேசுவாங்களோ என்கிற தயக்கத்தோடு பார்க்கிற ரசிகர்கள், மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்களை அவங்க குடும்ப உறுப்பினராகப் பாவிப்பதைக் கண்கூடாக காண முடிகிறது. சமீபத்தில் ஒரு நீதிபதி என்னிடம், ‘உன்னை மாதிரி ஒரு பொண்ணைத்தான் என் மகனுக்குத் தேடிக்கொண்டிருக்கேன்'னு சொன்னது மக்களிடையே எனக்குக் கிடைத்த நன்மதிப்பைக் காட்டியது.
தமிழ்தாங்க நம்முடைய தாய்மொழி. அதில் பேசுவதுதான் நமக்கு அழகு. அதுதான் நமக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தும். அந்நிய உணர்வு இல்லாம பக்கமா இருக்கிற மாதிரியான உணர்வை தமிழால்தான் ஏற்படுத்த முடியும்.
நிகழ்ச்சி தொகுப்பு தவிர நிறைய புத்தகம் படிப்பேன். இதற்காக எங்கள் அலுவலகத்தில் ஊழியர்களுக்காகத் தனி நூலகமே அமைத்திருக்கிறார்கள். எத்தனை நிகழ்ச்சிகள் செய்து வந்தாலும், எதிலும் என் தனி அடையாளத்தைப் பதிவு செய்யத் தவறக்கூடாது என்பதுதான் என்னுடைய எதிர்கால ஆசை," என்று சொல்லி அதே டிரேட் மார்க் சிரிப்போடு நன்றி சொன்னார் ஆர்த்தி.
No comments:
Post a Comment