
அரசாங்கத்திலுள்ள சிங்கள பௌத்த இன வாதிகள் வெளியேற்றப்படாவிட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எந்த நேரத்திலாவது திடீரென கவிழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கும் நவசம சமாஜக் கட்சி அரசுக்குள்ளேயே அரசுக்கு எதிரான சக்திகள் செயற்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
இது தொடர்பாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை, கல்கிசை மா நகர சபை உறுப்பினருமான கலா நிதி விக்கிரம பாகு கருணாரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில்:
அணைந்து போகவுள்ள விளக்கு பிரகாசமாக எரியும். அதே போன்று தான் அரசாங்கத்திலுள்ள இன வாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் பிரகாசிக்கின்றனர். விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போய்விடும். ஜனாதிபதி தன்னையும், அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இன வாதிகளை வெளியேற்ற வேண்டும். வெகு விரைவில் இது இடம் பெறும்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு மன தார விருப்பமில்லை. ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பரிந்துரைகளை அமுல் படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்காது. அதன் போது ஆட்சியை தொடர முடியாது போகும். கியூபாவால் எமக்கு உதவி செய்ய முடியாது. அந்தளவுக்கு அந் நாடு செல்வந்த நாடல்ல.
எனவே மிக விரைவில் அரசிற்குள்ளிருக்கும் இன வாதிகள் வெளியேற்றப்பட்டு பரிந்துரைகள் அமுல் படுத்தப்படும் நிலைமை உருவாகும். இவ்வாறான இன வாதிகள் இந்த நாட்டில் தோன்றியமையானது சிங்கள , பௌத்த மக்கள் செய்த "பாவம்' ஆகும். அரசுக்குள்ளேயே அரசை கவிழ்க்கும் சதித் திட்டம் தோல்வி அடையாவிட்டால் ஜனாதிபதியின் ஆட்சி பறி போகும் என்றார்.


No comments:
Post a Comment