
35 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகி நடித்தவர், தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் 700 திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக களம் இறங்கி வெற்றி பெற்றவர் நடிகை அனுராதா. இப்பொழுது சின்னத்திரையில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தங்கம் தொடரில் சரசரக்கும் பட்டு கட்டி, கழுத்து நிறைய நகை போட்டு எப்பொழுதும் அலங்காரத்துடனேயே இருக்கும் முத்தரசி அத்தையாக வரும் அனுராதா அளித்த சிறப்பு பேட்டி.
கவர்ச்சி நடிகையாக நடித்து விட்டு குடும்ப சூழ்நிலையால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டே ஒதுங்கி இருந்தேன். பின்னர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தங்கம் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் நடிகர் விஜயகுமாரின் தங்கையாகவும், ரம்யா கிருஷ்ணனின் அத்தையாகவும் நடித்து வருகிறேன்.
இப்பொழுது உள்ள திரைப்படங்களில் கவர்ச்சிப் பாடல்கள் என்று தனியாக இல்லை. கதாநாயகிகளை கவர்ச்சியாக உடை அணிகின்றனர். அவர்களே ஒரு சில குத்துப்பாட்டுக்கு நடனமாடுகின்றனர். அதனால் கவர்ச்சி கதாபாத்திரம் என்று தனியாக ஒன்று தேவையில்லை என்றாகிவிட்டது.
என்னைப் போல என் மகளும் சினிமாவில் கவர்ச்சி நடனமாடவேண்டும் என்று நான் விரும்பவில்லை. அவள் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன். குவாட்டர் கட்டிங் திரைப்படத்தில் போலீஸ் வேடத்திலும், தெலுங்கு மொழி திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இதற்காக நந்தி விருதும் பெற்றிருக்கிறார்.
ஜோதி லட்சுமி போல நீங்கள் ஏன் மீண்டும் கவர்ச்சி நடனம் ஆடக்கூடாது என்று நிறைய பேர் என்னிடம் கேட்கின்றனர். ஜோதிலட்சுமி உடம்பை அப்படியே கச்சிதமாக வைத்திருக்கிறார். எனக்கு அப்படி இல்லை. ஆனால் சினிமாவில் எனக்கென்று ஒரு இடத்தை தக்கவைப்பேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.


No comments:
Post a Comment