இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தி தொடரப்பட்டுள்ள வழக்கு தங்கள் நாட்டின் மத்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் இன்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென்று அவுஸ்திரேலிய பிரதம மந்திரி ஜூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்து, இப்போது அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்றிருக்கும் அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவர் மெல்பர்ன் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநல அமைப்பு நாடுகளின் அரசாங் கத்தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேர்த் நகரத்திற்கு வரவிருந்த வேளையிலேயே இந்த வழக்கு பற்றிய விபரங்கள் வெளிவந்தன.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அங்கீகாரமின்றி எந்தவொரு வழக்கு விசாரணையும் மேற்கொள்ள முடியாதென்று நேற்று (செவ்வாய்) அந்நாட்டு பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட் திட்ட வட்டமாக அறிவித்தார்.
இது போன்ற விடயங்களில் எத்தகைய சட்ட நடவடிக்கையும் தங்கள் நாட்டின் சட்டமா அதிபரின் அங்கீகாரமின்றி மேற்கொள்ளபட முடியாதென்று பிரதம மந்திரி ஜூலியா கில்லர்ட் பேர்த் நகரில் ஏ.பி.சி. வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
சட்டமா அதிபருக்கு இதுவரை இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கான அனுமதி எதனையும் எவரும் கேட்கவில்லை என்றும் பிரதம மந்திரி கூறினார்.
இதே வேளையில் ஜெகதீஸ்வரனின் சட்டத்தரணிகள் இந்த வழக்கு பற்றிய முன் அறிவித்தலை சட்டமா அதிபர் ரொபட் மெக்லண்டுக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சட்டமா அதிபரின் பேச்சாளர் ஒருவர் இந்த கோரிக்கை சட்டமா அதிபருக்கு கிடைக்கவில்லை என்றும் ஆயினும், சமஷ்டி பொலிஸார் இதுபற்றி விசாரணைகளை நடத்தி வருவதாக கூறினார். அவுஸ்திரேலியாவின் சமஷ்டி பொலிஸார் இதற்கான கோரிக்கை தங்களுக்கு கிடைத்ததாகவும் அதுபற்றி பகுப்பாய்வு செய்து கொண்டிருப்பதாகவும் அறிவித்தனர்.
தங்கள் நாட்டுக்கு வரும் வெளிநாடுகளின் தலைவர்களுக்கு சர்வதேச சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிப்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கடமையென்றும் சமஷ்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றச் செயல்கள் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் கவலை கொண்டிருக்கிறதென்றும் பிரதம மந்திரி ஜூலியா கில்லர்ட் மேலும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா உட்பட மேலும் பல நாடுகள் இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக பிரதம மந்திரி மேலும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு நவம்பர் மாதம் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
2009ல் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் முடியும் காலகட்டத்தில் இலங்கை பலதரப்பட்ட யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த யுத்தத்தில் பல தசாப்தங்களாக நடைபெற்றுவந்த பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் திஷார சமரசிங்கவிற்கு எதிராகவும் இத்தகைய யுத்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த போதிலும் அவற்றை அவர் நிராகரித்திருந்தார்.
No comments:
Post a Comment