சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இப்போது சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளது.ஒரு காலத்தில் ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு சிறிலங்கா அரசுக்கு எதிராகத் திரும்பினர் என்று தெரியாமல் சிறிலங்கா வெளிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளது.
இவர்களில், குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் அடெனோல்ற் 2004இல் சுனாமிக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தவர்.
குடியரசுக் கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினராக பிராங் வூல்பீ விடுதலைப் புலிகளை மிகமோசமாக எதிர்த்து வந்தவர் என்பதுடன் சிறிலங்காவுக்கு அமெரிக்காகவின் ஆயுத உதவிகள் கிடைப்பதற்கும் காரணமாக இருந்தவர்.
மேலும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோய் பிற்ஸ், ஹெல்லி பேர்கெலி, சூமைரிக், ஜோன் கோஸ்ரெலோ, ஸ்கொட் கரெற், இலியானா றொய்ஸ்-லெரினென், பில் யூங், ஜிம் மோறன், டனா றொபாக்கர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னர சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கி வந்தனர்.
இவர்கள் அனைவரும் தற்போது சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளதுடன் இதற்கான காரணங்கள் என்ன என்று ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அமெரிக்காவில் சிறிலங்காவுக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு பல மில்லியன் டொலர்களைக் கொடுத்து பொதுமக்கள் உறவுக்கான நிலையம் ஒன்றுடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருந்தது.
சிறிலங்கா அரசின் இந்த பரப்புரைகளும் பிசுபிசுத்துப் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சனல்4 காணொலி தொடர்பாக, சிறிலங்கா அரசு பணிக்கு அமர்த்திய பொதுமக்கள் உறவு நிலையம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்ட பரப்புரைகளும் எடுபடவில்லை என்றும் தெரியவந்துள்ளது.


No comments:
Post a Comment