தமிழர்களின் வரலாற்றில் யூலை மாதம் என்பது கனத்த ஒரு மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து ஆண்டுகளின் யூலை மாதங்கள் முக்கியமானவை. 1983ம் ஆண்டிற்கு முன்பே யூலை மாதம் தமிழர்களுடன் பின்னிப் பிணைந்து விட்டது.
1975ம் ஆண்டு யூலை மாதமே தமிழர்களின் துரோகியாகக் கருதப்பட்ட அல்பிரட் துரையப்பா பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் விடுதலை இயக்கங்களின் ஆரம்பத்திற்கு, வளர்ச்சிக்கு வித்திட்டு தனித்தியங்கிய விடுதலை அபிமானம் கொண்ட நபர்களையெல்லாம் ஒன்று சேர வைத்தது.
அதன் பின்பு 1983ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைச் சாட்டாக வைத்து சிறீலங்கா தேசம் தமிழர்களின் மீதான இனச் சுத்திகரிப்பு யுத்தத்தை அரச மயப்படுத்தி செய்திருந்தது. எனவே இதுவே விடுதலைப் போரிற்கு உரமேற்றிய மாதமாகவும் வரலாறு நினைவுகூரும் ஒரு மாதமாகவும் அமைந்து விட்டது
1983ம் ஆண்டு யூலை மாதத்தையே நாங்கள் கறுப்பு யூலையாக நினைவு கூர்ந்தாலும் இந்த மாதமே 1975ல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பேரெழுச்சிக்கு வித்திட்ட மாதமாகவும் அமையப் பெற்றது.
இவ்வாறு வளர்ந்த ஒரு விடுதலைப் போராட்டத்தில் 1996ம் ஆண்டு யூலை விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என மேற்குலக நாடுகள் அறிவிக்கும் ஒரு கரும்புலித் தாக்குதலிற்கு வழிவகுத்திருந்தது. 1987ம் ஆண்டு மேஜர் மில்லர் நெல்லியடியில் ஆரம்பித்து வைத்த கரும்புலித் தாக்குதலிருந்து தொடர்ந்து பல பாரிய தாக்குதல்கள் தென்னிலங்கையில் கூட நிகழ்த்த பெற்றிருந்தாலும் 1996ம் ஆண்டு யூலையில் இடம்பெற்ற தாக்குதல் மேற்குலக நாடுகளை விடுதலைப்புலிகள் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டத்திற்கு இட்டுச் சென்றது.
யாழ்ப்பாண இடம்பெயர்வு 1995ல் இடம் பெற்று வன்னிநிலப்பரப்பிற்கு விடுதலைப் போராட்டம் நகர்த்தப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் கட்டடப் பொருட்கள் திணைக்களத்தை திறப்பதற்காக வருகை தந்த வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சரான நிமால் டி சிறீபாலாவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் தப்ப சுமார் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்தனர்.
இதனை அப்போதைய பிரித்தானியப் தூதர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்தார். “இதுவரை விடுதலைப் போராட்டம் என்ற ஒரு சிறிய நியாயப்பாடு இருந்தது. ஆனால் இத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் இதுவரை நாளும் விடுதலைப்புலிகளிற்கு அடைக்கலம் தந்து அவர்களுடனே வாழ்ந்த மக்கள். இவர்களைக் கொல்லத் துணிந்ததானது பச்சைப் பயங்கரவாதம்” என எழுதியிருந்ததோடு,
கொழும்பிலுள்ள மேற்குலகத் தூதர்கள் பெரும்பாலானோர் தன்னைப் போன்றே இந்தக் கருத்தை ஏற்றுள்ளதோடு இந்தப் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராட்டமாகவே பார்க்க வேண்டிய தேவையை விடுதலைப்புலிகள் ஏற்படுத்தி விட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார். உண்மையிலேயே உலகம் விடுதலைப்புலிகளை ஒடுக்க திராணி கொண்ட ஒரு துர்ப்பாக்கிய மாதமாக 1995ம் ஆண்டு யூலை அமைந்த போதும் அந்தத் தாக்குதலிற்கு காரணம் யார் என்பது இன்றுவரைத் தெரியவரவில்லை.
அதன்பிறகு கனத்த யூலையாக அமைந்தது கடந்த வருடம். ஆம் 2010ம் ஆண்டு யூலையும் தமிழர்களிற்கு ஒரு கனத்த யூலையாக “வேறு விதமாக” அமைந்து விட்டது. 2009 மே 19ம் திகதி ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் அமெரிக்காவானது தமிழ்மக்களின் தீர்வு குறித்து புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சிறீலங்கா அரசு பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
அதுவே புலம்பெயர்ந்த தமிழர்களுடன் சிறீலங்கா பேசவேண்டும் என்ற நிலைப்பாடாக அமெரிக்காவால் தெரிவிக்கப்பட்டு வந்தபோதும், கடந்த வருடம் யூலை மாதமே திடீரென இலங்கைக்குச் சென்ற அமெரிக்கத் தென்னாசியப் பிரதிநிதி றொபேட் பிளாக் “இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரதிநிதிகளுடன்” இலங்கையரசு ஒரு ஒற்றுமைப்பாட்டிற்கு வர வேண்டும் என்று கூறி, இனி விடுதலைப்புலிகள் சார்பான புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுக்கான தேவையில்லை என்ற மறைமுக சமிக்ஞ்சையை வெளியிட்டுச் சென்றிருந்தார்.
இதுவே இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகளிடையே ஏற்படுத்தப்படும் கூட்டின், ஒற்றுமைக்கான தேடலின் கருவாகக் கூட அமைந்திருந்தது. ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், சிறீஸ்காந்தா என அனைவருமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருப்பெற அதற்கு ஆதரவளிக்க எம்முடன் திரண்டது மனோ கணேசன் என்ற தென்னகத்து வேங்கை.
என்ன அதிசயம் ஈழத்தமிழரின் தலைமை இவ்வாறு இறுக்கம் பெற, தமிழர்களுடன் பேசுங்கள் என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் சென்னையில் வைத்து நேரடியாகச் சொல்லும் மாதமாகவும், தமிழர்களின் தலைமை யார் என்பதை ஒரு சிறிய உள்ளாட்சித் தேர்தலில் தீர்மானிக்கிற மாதமாகவும் 2011ம் ஆண்டின் இன்றைய யூலை அமைந்து விட்டது. அதுவும் 1983ல் இனவாதம் உச்சக் கட்டத்தில் நின்ற அதே 23ம் திகதியில் இந்த நெருப்புப் பரீட்சை இன்று நடக்கிறது.
இருந்த போதும் 2011ம் ஆண்டு யூலை நிட்சயம் விடிவைத் தரும் என்பதற்கான கட்டியங்களையும் காட்டி நிற்கிறது. உலகத்தின் பால் உள்ள தமிழர்கள் அமைப்புக்கள் யாவும் ஒருமித்த குரலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரியுங்கள் என்று விடுக்கும் குரல் இதுவரை தமிழர் வரலாற்றில் இடம்பெற்றதில்லை. ஆனால் இதற்காகவே காத்திருந்தோம். இது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் புதிது. புதிது என்பதை விட அரிதிலும் அரிது என்பதே இதனை வர்ணிக்க சிறந்த சொல்லாடல்.
வரலாறு ஒருபோதும் ஒரு சாராருக்கு தொடர்ந்தும் இண்ணல்களைத் தந்து கொண்டேயிருக்கப் போவதில்லை. இண்ணல்களின் முடிவில் கூட இனியதொரு திருப்பம் பிறக்கும். ஏனென்றால் இது காலம் இட்ட கட்டளை. களங்கண்ட தமிழரின் வாழ்வியலின் தீர்விற்காக பேசு என்கிறது சர்வதேசம். பேசுவோம் என்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இனி சர்வதேசம் சங்கடப்படப்போவது சிறீலங்காவால். சிறீலங்கா முரண்டாலும் தமிழருக்கே வெற்றி! சிறீலங்கா பணிந்தாலும் தமிழருக்கே வெற்றி. புரியாத சமன்பாடு காலத்தால் காட்டப்படுகிறது. வெல்வதைத் தவிர மாற்றுவழியே இல்லாத ஒரு சமரசத்திற்கு தமிழினம் தன்னை இந்த யூலையில் தயார்ப்படுத்திக் கொள்கிறது.
No comments:
Post a Comment