இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ‘அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை’ நடத்தப்பட வேண்டும் என, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருவதாக, சனல்-4 (Channel-4) தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை பன்னாட்டு சமூகத்திடம் கொண்டு சென்ற பெருமைக்குரிய பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, அடிக்கடி ஈழத்தமிழர் பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றது.
சனல்-4 முன்னர் வெளியிட்ட காணொளிகள் மற்றும் இலங்கையின் படுகொலைக்களம் போன்ற காட்சிச் சாட்சிகளால் ‘அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான’ அழுத்தம் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் மக்களிற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் லீ ஸ்கொட் முன்மொழிந்த நாடாளுமன்ற விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் பிரேரணையில் (EDM – Early Daily Motion) இதுவரை 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகி இதில் கையெழுத்திடுமாறு கோரிக்கை விடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment