இந்த ஆண்டு 28 ஆவது கருப்பு யூலை நினைவு ஆண்டாகும். தமிழ் மக்களைப் பொறுத்தளவில் கருப்பு யூலை தமிழர்களைப் பூண்டோடு அழிக்கச் சிங்கள – பௌத்த பேரினவாதிகள் திட்டமிட்டு மேற்கொண்ட இனப் படுகொலை (genocide) ஆகும்.
இனப்படுகொலைக்கு பன்னாட்டு சட்டத்தில் சொல்லப்பட்ட வரைவிலக்கணம் 1983 கருப்பு யூலைக்கு முற்றிலும் பொருந்தும். கறுப்பு யூலை தமிழ்மக்களின் ஆழ்மனதில் ஆணி அடித்தது போல் மாறாத காயத்தையும் தீராத வடுவையும் ஏற்படுத்தியுள்ளது. அதனை எத்தனை ஊழி சென்றாலும் யாராலும் அழிக்க முடியாது. ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் நாடு முழுதும் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அதிவுயர் பாதுகாப்பு வெலிக்கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையைச் செய்த எவரும் இதுவரையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படுகொலை நிகழ்வானது ஒரே வாரத்தில் ஆனால் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. முதலாவது படுகொலை யூலை 23, 1983 அன்று 35 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். இரண்டாவது படுகொலை இரண்டு நாட்களின் பின்னர் யூலை 28 ல் இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கறுப்பு யூலை சிங்கள இனத்தையும் தமிழ் இனத்தையும் மனத்தினால், காயத்தினால், வாக்கினால் ஒன்று சேராதபடி நிரந்தரமாகப் பிரித்து வைத்து விட்டது.
1983 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது சிங்கள இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி – குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் - ஆழ்கடல் போல் இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது.
யூலை, 1983 இனப்படுகொலை மூலம் தமிழர்களை நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும் என்பது அன்றைய ஜெயவர்த்தன அரசின் குறிக்கோளாக இருந்தது. தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்துவதன் மூலம் அவர்களது எண்ணிக்கையைக் குறைத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என ஜெயவர்த்தனா கணக்குப் போட்டார்.
ஆன காரணத்தினால் தமிழர்கள் தொகை தொகையாக இலங்கையை விட்டு வெளியேறுவதை அவர் உள்ளுர வரவேற்றார். அன்றைய சிங்கள – பவுத்த இனவாதிகளது எண்ணமும் அதுவாகவே இருந்தது.நல்ல காலமாகத் தமிழ்மக்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டுத் தப்பி ஓடவில்லை.
ஓடியிருந்தால் ஜெயவர்த்தனாவின் குறிக்கோள் தன்பாட்டில் நிறைவேறியிருக்கும். இனச் சிக்கல் தானாகவே தீர்ந்திருக்கும்.ஜெயவர்த்தனா போட்ட கணக்குக்கு எதிர்மாறாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளியில் இருந்தவாறு விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்தார்கள்.
இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் சிங்கள – பவுத்த இனவாதிகளுக்குத் தொண்டையில் சிக்கிய முள்போல் இருக்கிறார்கள்.முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் பற்றிய சிங்கள அரசின் அச்சம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இன்றைய ஆட்சியாளர்களது தூக்கத்தை கலைத்துவருகின்றன. அதனால் இந்த அமைப்புளுக்கு எதிரான பரப்புரையை சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ளது.
கோடிக் கணக்கான பணத்தைப் பொதுமக்கள் தொடர்பு அமைப்புக்களுக்குக் (Public Relations firms) கொடுத்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான பரப்புரையை சிறிலங்கா அரசு செய்கிறது.
வி.புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களை ஆதரிக்கும் தமிழர் அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டும் அல்லது அவர்களது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா இனவாத அரசு மேற்குலக நாடுகளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
அதில் அவர்கள் பேரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். வி.புலி ஆதரவாள ஆதரவாளர்கள் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பல நாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோருமே தமிழ்த் தேசியத்தை நேசிக்கிறார்கள் வெளியில் இருந்து கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தோள் கொடுக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. கணிசமான தொகையினர் தாயக மண்ணையும் அங்கு அல்லல்பட்டு அழுது கண்ணீர் விடும் மக்களையும் மறந்துவிட்டார்கள்.
புலி பிடித்துக்கொண்டு போய் கட்டி வைத்துப் பணம் கேட்டு சித்திரவதை செய்தார்கள். அதற்குப் பயந்து ஓடி வந்துவிட்டேன் என்று ‘கதை” எழுதிக் குடியுரிமை பெற்றவர்களும் நாட்டை மறந்துவிட்டார்கள்.
நாங்கள் தமிழ்க் கனேடியர்கள் அல்ல. நாங்கள் கனேடியர்கள். கனடிய எல்லையிலேயே போராட்டம், விடுதலை, தாயகம், தேசியம், தன்னுரிமை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு வந்துவிட்டோம்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இன்னும் சிலர் “நாங்கள் நாட்டை விட்டு ஓடிவந்திராவிட்டால் இத்தறுதி செத்துப் புதைத்த இடத்திலும் புல்லும் முளைத்திருக்கும், நல்ல காலம் தப்பி வந்துவிட்டோம். புதிய வாழ்வு ஒன்றைத் தொடங்க வாய்ப்பளித்த கனடாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” எனக் கூறுகிறார்கள். இதனை மனதுக்குள் சொல்லிக் கொண்டால் பருவாயில்லை. வெட்கமோ துக்கமோ இல்லாது காற்றலையில் வந்து சொல்கிறார்கள்.
ஜெயவர்த்தனாவின் பின் ஆட்சிக் கட்டில் ஏறிய சிங்கள – பவுத்த இனவாதிகளின் குறிக்கோளும் தமிழர்களைக் கொல்வதின் மூலம் அவர்களது எண்ணிக்கையை குறைப்பதுதான். பல விதத்தில் அவரையும் இவர்கள் மிஞ்சிவிட்டார்கள். அமைதிக்கான போர் என்ற முழக்கத்தோடு சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா 1995 இல் வடக்கில் பாரிய படை நடவஎக்கைகளை மேற்கொண்டார். தமிழ்மக்களுக்கு எதிராகக் கொடிய போரை முடுக்கிவிட்டார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றி சிங்கக் கொடியை சந்திரிகா குமாரதுங்கா பறக்கவிட்டார். தமிழ்மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். இலட்சக் கணக்கில் வீடு வாசல்களை இழந்து இடம் பெயர்ந்து ஏதிலியானார்கள்.
இப்போது ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே ஜே.ஆர். ஜெயவர்த்தனாவையே “நல்லவன்” ஆக்கிவிட்டார். “ஜே.ஆர். ஜெயவர்த்தனா பருவாயில்லை” என்று சொல்ல வைத்துவிட்டார்.
1983 யூலை மாத இனப் படுகொலையில் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு முன்னும் பின்னும் சிங்களப் படையினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 70,000 இருக்கும் என்று சொல்கிறார்கள். வெள்ளை வானுக்குப் பயந்து நூற்றுக் கணக்கான தமிழ் வணிகர்கள், ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டே வெளியேறி விட்டார்கள். 2005 - 2010 காலப்பகுதியில் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் தமிழர்கள் 30, சிங்களவர் 3, முஸ்லிம் ஒருவர்.
கருப்பு யூலை இனப் படுகொலைக்கு இரண்டு கிழமைகளுக்கு முன்னர் இலண்டனில் இருந்து வெளியாகும் Daily TelegraphDaily (யூலை 11, 1983) ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை நேர்காணல்கண்டு ஒரு செய்தியை வெளியிட்டது.
"I am not worried about the opinion of the Tamil people.. now we cannot think of them, not about their lives or their opinion ... Really if I starve the Tamils out, the Sinhala people will be happy.”
“நான் தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப் படவில்லை. அவர்கள் பற்றி நாம் இப்போது சிந்திதுப் பார்க்க முடியாது. அவர்களது உயிர்கள் பற்றியோ நினைப்புப் பற்றியோ……… சொல்லப்போனால் நான் தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.”கருப்பு யூலை இனப் படுகொலை தொடங்கி 5 நாள்கள் மட்டும் ஆட்சித் தலைவர் ஜெயவர்த்தனா வெளியில் தலைகாட்டவே இல்லை. பின்னர் தொலைக்காட்சியில் தோன்றிய போது அவர் தமிழ் மக்களை விளித்து ஒரு ஆறுதல் வார்த்தை கூடச் சொல்லவில்லை. மாறாக வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் பேசினார். “சிங்கள மக்களது கோரிக்கைகளையும் அவர்களது தேசிய மரியாதையையும் ஏற்றுக் கொள்ளும் காலம் வந்து விட்டது” ("the time had come to accede to the clamour and the national respect of the Sinhalese people" ) என ஜெயவர்த்தனா மார் தட்டினார்.
ஜெயவர்த்தனாவின் மனப்பான்மை இன்றும் தொடர்கிறது. மகிந்தா இராசபக்சே ஜெயவர்த்னாவைப் போலவே தமிழ்மக்களுக்குத் தாயகம் என்று ஒன்றில்லை, தமிழர்கள் ஒரு தேசிய இனம் அல்ல, தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை கிடையாது, அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தின் கீழ்த்தானும் தீர்வு இல்லை என்கிறார். அனைத்துக் கட்சிக் குழுவின் அறிக்கையைக் குப்பைக் கூடைக்குள் எறிந்துவிட்ட மகிந்த இராசபக்சே இப்போது பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில ஏறியது போல இனச் சிக்கலைத் தீர்க்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது காலத்தை இழுத்தடிக்கும் முயற்சியாகும்.
இன்று யாழ்ப்பாணக் குடாநாடு இனவாத வெறிபிடித்த இராணுவத்தின் இரும்புப் பிடியில் சிக்குண்டு இருக்கிறது. அங்கு நிரந்திரமாக நிறுத்தப்பட்டுள்ள 50,000 ராணுவத்தினரின் ஆட்சியே நடைபெறுகிறது. தமிழ் அரச ஊழியர்களுக்கு இராணுவதளபதியே கட்டளை பிறப்பிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களை சாதாரண இராணுவ சிப்பாய்கள் தாக்குகிறார்கள். இராணுவத்தின் விருப்பு வெறுப்பின் படியே அங்கு யாரும் எதையும் செய்ய முடியும். அங்கு சனநாயகம், சுதந்திரம், இயல்பு வாழ்க்கை என்பதெல்லாம் மருந்துக்கும் கிடையாது.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் மட்டுமல்ல அதற்குப் பின்னரும் சரண் அடைந்த வி.புலித் தளபதிகளும் போராளிகளும் இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இராணுவ புலனாய்வுப் பிரிவு மக்களது ஒவ்வொரு அசைவையும் வேவு பார்க்கிறது. இராணுவ விதானைமார் எல்லா ஊர்களுக்கும் நியமிக்கப் பட்டுள்ளார்கள். விளையாட்டுப் போட்டியா? கோயில் திருவிழாவா? திருமண வீடா? எதுவானாலும் இராணுவத்திடம் முன் அனுமதி பெறவேண்டும். இராணுவ தளபதிகளுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும். வருகிற இராணுவ தளபதிகளுக்கு பூரண கும்ப மாலை மரியாதை செய்யப்பட வேண்டும்.
நக்கீரன்
No comments:
Post a Comment