7/20/2011 11:00:20 AM
தமிழ், மலையாளம், இந்தி சினிமா துறையில் நடிகைகளின் வாழ்க்கையை படமாக்கும் போக்கு இப்போது அதிகரித்துள்ளது. கடந்த வருடம் மலையாளத்தில் ரிலீசான 'திரக்கதா' படம், மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை பற்றிய கதையாக கூறப்பட்டது. பிருத்விராஜ், பிரியாமணி நடித்த அப்படம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சில இயக்குனர்கள், வாழ்ந்து மறைந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் சில நடிகைகளின் வாழ்க்கையைப் படமாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சில்க் ஸ்மிதாவுக்கு முன்னுரை தேவையில்லை. அவரது சொந்த வாழ்க்கையிலும், காதல் விவகாரத்திலும், திடீர் தற்கொலையிலும் ஏராளமான ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றை 'டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகின்றனர். சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். இப்படம் ரிலீசான பின், சில்க் ஸ்மிதா குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்கின்றனர், சினிமா ஆர்வலர்கள். இதேபோல, தற்போது மலையாளத்தில் உருவாகும் படம், 'நாயிகா'. இது, பழம்பெரும் நடிகை சாரதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதில் இளமைகால சாரதா வேடத்தில் பத்மப்பிரியா நடிக்கிறார். முதுமைகால கேரக்டரில் சாரதாவே நடிக்க இருக்கிறார். திடீரென்று புகழின் உச்சிக்கு சென்று சிலவருடங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போனார் சாரதா. பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தார். சினிமாவிலிருந்து அவர் விலக காரணமாக இருந்தது எது என்பது உள்பட, மலையாள சினிமாவின் பல திரைமறைவு ரகசியங்கள் இந்தப் படம் மூலம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, கவர்ச்சி பிளஸ் காமெடி வேடங்களில் நடித்து வரும் சோனா, தமிழில் தன் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். 3 பருவங்களில் வரும் அவரது கேரக்டரில், ஒரு கேரக்டரில் அவரே நடிக்கிறார். இப்படத்தில் தன்னை ஏமாற்றிய, தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த பலருடைய முகமூடியை கிழித்து எறிவேன் என்று ஆவேசமாகச் சொல்லியிருக்கிறார். தவிர, டைரக்டர் செல்வராகவனை விவாகரத்து செய்துவிட்டு, நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்தும் சோனியா அகர்வால், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது பிரபல நடிகை ஒருவரின் வாழ்க்கை கதை என்கிறார்கள்.
ஆனால், அந்த நடிகை யார் என்பதை இப்போது சொல்ல மறுக்கின்றனர். ''சினிமாவில் விரைவிலேயே புகழின் உச்சிக்கு சென்று, திடீரென்று தற்கொலை செய்துகொண்ட நடிகைகளின் வாழ்க்கை புரியாத புதிராகவே உள்ளது. ரசிகர்களுக்கு அவர்களின் கதைகள், தினந்தோறும் ஆயிரம் ரகசியங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறது. என்ன நடந்திருக்கும், எப்படி நடந்திருக்கும் என்பது போன்ற விஷயங்கள் ரசிகனை தூண்டிக்கொண்டே இருப்பதால், சம்பந்தப்பட்ட நடிகைகளின் கதைகளைப் பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. அதாவது அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் ஆவல்தான். அதனால்தான் நடிகைகளின் கதைகளை படமாக்கி வருகின்றனர்'' என்கிறார் மூத்த இயக்குனர் ஒருவர்.
No comments:
Post a Comment