முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏன் ஏற்பட்டது என்பதற்கான போதுமான காரணங்கள் இன்னமும் முழுமையாக வெளிவராத சூழலில் – அக்காலப்பகுதியில் களத்தில் நின்ற போராளிகளின் அனுபவப்பகிர்வுகளையும் அந்நேரத்தில் வான்வழி தொடர்புகள் ஊடாக இணைந்துநின்ற போராளிகளின் தகவல்களையும் மையமாக கொண்டு – முழுமையான தகவல்களை அறிந்துகொள்ளமுடியும் என்ற நம்பிக்கையுடன் இன்னும் பல அனுபவப்பகிர்வுகள் தொடர்ச்சியாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.
அந்தவகையில் ஆனதி அவர்களின் இவ்வனுபப்பகிர்வின் எட்டாவது தொடரில் இணைந்துகொள்வதற்கு முன்னதாக இப்பதிவானது அவரின் தனிப்பட்ட அனுபவங்களின் தொகுப்பாகவே வெளிவருகின்றது என்பதையும் எனவே இவை முழுமையானதாக அமையாது என்பதையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
ஆ-ர்.
இனி பதிவிற்குள்...
வட்டுவாகல் வீதியில் இருத்திவைக்கப்பட்ட சனங்களுக்காக மண்ணணை மீது நின்றவன் கொச்சை தமிழில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தான். “ஏ ஏ கொஞ்சம் கொஞ்சம் பேரா போங்க” என்று திடீரென சத்தமிட்டான்.
சொல்லத்தகாத வார்த்தைகளால் ஏசினான்தான் என்றாலும் குழந்தைகளோடு நின்றவர்களையும் கர்ப்பிணிகளையும் காயமடைந்தவர்களையும் முதலில் செல்ல அனுமதித்தான். தான் மனிதாபிமானம் உள்ளவன்தான் என்பதை செயலால் வெளிப்படுத்திய அவன் போராளிகளை படுகேவலாமாக பேசினான்.
“நாங்க உங்களுக்காக கஸ்ரப்படுறம். குளிக்காம நிக்கிறம். நித்திரை இல்லாம நிக்கிறம். பாருங்க எங்கள. நாங்க ஏன் இப்பிடி கஸ்ரம் படணும்? உங்களுக்காக தான்” என்றவன் தனது ஊத்தை உடையை தொட்டுக்காட்டினான்.
“பாருங்க இன்னும் பசி. சாப்பாடு இல்ல. வேற ஆமி தமிழ் தெரியாது. நான் மட்டும் நிக்கணும். உங்களுக்காகதான் நிக்கிறது” என்று அவன் தான் பசியுடன் நிற்பதாகவும் அது எங்களுக்காக தான் செய்யும் தியாகம் என்றும் சொன்னான்.
கொலைப் பட்டினி கிடந்த எங்களில் எவரையும் அவனது அந்த வார்த்தைகள் தொடவில்லை. விட்டால் காணும் என்று உள்ளே சென்றுவிடவே துடித்தார்கள் சனங்கள். அதனால் கொஞ்சப்பேர் போங்க என்றதும் பலநூறு பேராய் எழுந்து சென்றார்கள்.
படையினரின் கெட்ட வார்த்தைகளால் மட்டும்தான் அவர்களாலும் சனங்களை அடக்கிவைக்க முடிந்தது. இருபது முப்பது நிமிட இடைவெளி விட்டுத்தான் இருநூறு முன்னூறு பேர்களை அனுப்பினான். மற்றைய நேரங்களில் யாரையாவது ஏசிக்கொண்டுதான் இருந்தான்.
எலும்புந்தோலுமாய் ஆறாத காயத்துடன் ஓரமாய் எழுந்துநின்ற ஒருவனை அதட்டி இருத்திய படையினன், “நீ கொட்டி? நீ கொட்டி?” என்றான். எதுவுமே பேசாமல் நின்ற அவனை இருக்கச்சொல்லி அதட்டினான். “அங்க வா உன்னை கவனிக்கிறன்” என்று அசிங்கமாய் ஏசினான்.
நாம் என்ன பாவம் செய்தோம். சுதந்திரமாக வாழ விரும்பியது குற்றமா? விடுதலைக்காக போராடப்போனது குற்றமா? எங்களை கொல்லவந்தவர்களை எதிர்த்துப் போராடியதுதான் தவறா? எதற்காக இப்படி அடிமைகளாகிறோம்? விம்மிய மனதை கல்லாக்கிக்கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.
அருகில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து செல்லும்போது நானும் எழுந்து மண்ணணையை கடந்தேன். வட்டுவாகல் பாலத்தில் கால்வைத்தபோது மனது வெறுமையாகிப்போனது.
பாலம் பல உடைவுகளோடேயே செப்பனிடப்படாமல் கிடந்தது. நான் சந்தியாவைவிட்டு விலகியேதான் நடந்தேன். அது எனக்கும்கூட வேதனையாகத்தான் இருந்தது. அவள் தலைமுடியை குட்டையாக வெட்டியிருந்ததாலும் பொய்க்காலுடன் நடந்ததாலும் படையினர் அவளை அடிக்கடி தடுத்து நிறுத்தினர்.
பாலத்தின் விளிம்புகளில் நின்ற படையினர் ஐதாகச்செல்லும் மக்களை அவதானித்துக்கொண்டேதான் நின்றனர். நான் தனியே செல்வது பாதுகாப்பானதா இல்லையா என்பது எனக்கு புரியவில்லை. பாலத்தின் கரையோடு நடந்தேன்.
பாலத்தில் மோதிய முல்லைக்கடலின் அலைகள் மெதுவாய் சலசலத்தன. இடப்புறமாய் நடந்த நான் அலைகளில் பார்வையை இறக்கினேன். முல்லைக்கடல் சோகமாய் அழுதுகொண்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தால் படையினரின் முகத்தை பார்க்கவேண்டி இருக்கும் என்பதால் அவர்கள் பார்வையால் விசாரிப்பார்கள். நான் பாலத்தின் தரையையே பார்த்துக்கொண்டு நடந்தேன்.
மோதிய அலைகள் என்னோடு ஏதோ பேசத்துடிப்பது போன்ற உணர்வு. அப்போதுதான் அவதானித்தேன். அங்கேயும் சில பிணங்கள் கிடந்தன. அவை பாலத்தில் அலைகளால் ஒத்துண்டபடி பொம்மைகளைப்போல மிதந்தன. ஏனோ நாற்றம் அடிக்கவில்லை. ஆனால் பிணங்கள் வெண்கட்டிகளைப்போலத் தெரிந்தன.
தொடர்ந்து பார்க்கப்பிடிக்காமல் நடையில் சற்று வேகத்தை கூட்டினேன். சந்தியாவை மறித்து எல் ரி ரி என்றவர்கள் இன்னுந்தான் அவளிடம் அவளுக்குப் புரியாத மொழியில் விசாரித்துக்ககொண்டு நிற்கிறார்களா இல்லையா என்று திரும்பிப் பார்க்க யோசனையாக இருந்தாலும் என்னையும் தடுத்து கதைகேட்டுவிட்டால் எவ்வளவு நேரம்தான் இன்னும் மெதுவாக நடக்க முடியும்?
பாலம் கடந்துவிட்டன கால்கள். மக்கள் இரண்டு வரிசைகளாகி வீதியில் இருபுறத்திலும் நடந்தார்கள். நூற்றுக்கணக்ககான படையினரது பார்வையும் எங்களை துளைத்தன. பாடசாலைக்கு அருகினில்நின்ற ஆலமரத்தடியில் கொஞ்சப்பேர் குந்திவிட்டனர். அதனால் என்னாலும் சந்தியாவுக்காக காத்திருக்க முடிந்தது.
சற்றுநேரம் தாமதித்தவாறு நின்ற என்னை யாரோ பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு. மெதுவாக பார்வையால் துழாவினேன். இராணுவத்தினன் ஒருவன் வைத்தகண் வாங்காமல் என்னையே அவதானித்துக்கொண்டு நின்றான்.
உடனேயே நான் நகர்ந்துகொண்டிருந்த வரிசையொன்றில் என்னை திணித்துக்கொண்டேன். அந்த வரிசை விரைவாக பாடசாலையை கடந்து நகர்ந்தது.
பொட்டல் வெளியில் கம்பிவேலி அடைத்து சிறிய பாதையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த வேலியூடாக இரண்டு வரிசைகளாக மக்கள் நகர்ந்தார்கள்.
மெல்ல மெல்ல நகர்வதும் நிற்பதுமாக இருந்தோம். மாலை சூரியன் எங்களை பார்க்க பிடிக்காவன்போல முகத்தை தொங்கப்போட்டுக்ககொண்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தான்.
கண்ணுக்கு தெரியக்கூடிய தொலைவில் உழவியந்திரம் ஒன்று சென்றது. சற்றுநேரம் கழிய இன்னொன்று இன்னொன்று என்று நகர்ந்த உழவியந்திரங்களின் பெட்டிகளில் மக்களின் தலைகளும் தெரிந்தன. “காயப்பட்ட ஆக்களை மிசின்பெட்டிகளில் ஏத்துறாங்க” என்று சொன்னார் ஒருவர்.
பாத்திங்களா? அங்க எண்டா காயப்பட்டதுகள் இந்நேரம் செத்திருக்குங்கள்.” என்று அங்கலாய்த்தாள் இன்னனொரு பெண். எவ்வளவு சீக்கிரமாய் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள்.
காயப்பட்டவர்களுக்காக போராளிகளின் எத்தனை நூறு வாகனங்கள் ஓடியிருக்கும்? கயஸ்களும் பிக்கப்களும் ஏன் பஜிரோக்களும்கூட அவசரத்திற்கு ஏற்றிச்சென்றனவே.
போராளிகள் பயன்படுத்திய வாகனங்களயில் காயமடைந்தோரை ஏற்றாத வாகனம் ஏதும் உண்டா? என்னோடு இறுதி நாட்களில் அறிமுகமான அறிவுகூட நாளொன்றுக்கு நான்கு தடவைகளுக்கு குறையாமல்தான் கயஸ் வாகனத்தில் படிந்த குருதியை கழுவுவானே.
இத்தனைக்கும் அவன் வேலை மருத்துவம்கூட இல்லை. அவனெல்லாம் எதற்காக மாண்டு மாண்டு காயமடைந்தவர்களை எல்லாம் அடிக்கடி ஏற்றி ஏற்றிச்சென்று மருத்துவமனையில் இறக்கினான்.
எறிகணை வெடிப்புகளையும் சீறிவரும் சன்னங்களையும் பொருட்படுத்தாமல் ஓடுவானே. அவனைப்போல எத்தனை நூறு போராளிகள் மக்களுக்கு உதவினார்கள்.
அவர்கள் தம் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் செய்த உதவிகளை எல்லாம் இவ்வளவு சுலபமாக மறந்துவிட்டார்களா எம்மக்கள்?
இத்தனைக வசதிமிக்க அரசாங்கமே உழவூர்திப் பெட்டிகளில்தான் காயப்பட்டவர்களை ஏற்றிச்செல்கிறார்கள். இவையெல்லாம் ஏன் இந்த பெண்களுகப்கு புரியவில்லலை. எனக்கு வேதனையாக இருந்தது.
இருள் மெல்ல மெல்ல எங்களை சூழத்தொடங்கியது. படையினர் மின்குழிழ்களை எரியவிட்டு செயற்கை வெளிச்சத்தை பரப்பினர். முட்கம்பி பாதையின் ஊடாக சுமார் ஒருமணிநேரம் நடந்திருப்போம். அந்த பாதையின் முடிவில் சில அதிர்ச்சிகள் காத்திருந்தன.
முன்னைநாட் போராளிகள் பலர் நின்று அறிவிப்பு செய்துகொண்டிருந்தார்கள்.
“மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சாள்ஸ் அன்ரனி, ராதா மோட்டார் படையணி, கண்ணிவெடிப்பிரிவு, கணணிப்பிரிவு, புலனாய்வுத்துறை, அரசியல்துறை, சிறப்புப்படையணிகள் என எல்லாத்தில இருந்த ஆக்களும் வலப்பக்கம் போங்க. பேரை பதிஞ்சிட்டு உங்கட வீட்டுக்காரரோடையே போகலாம்”.
கீறல் விழுந்த ஒலிப்பதிவு நாடா மாதிரி ஆள் மாறி ஆள்மாறி இதையே சொல்லிக்ககொண்டு நின்றார்கள். அதையே கொஞ்சம் சத்தமா ஒலிபெருக்கியிலும் நான்கைந்து வசனங்களை கூடச் சேர்த்தும் சிங்கள குரலொன்று ஒலிபெருக்கியில் அறிவித்துக்கொண்டிருந்தது.
யுத்தம் முடிஞ்சிபோச்சு. பிரபாகரன் செத்தாச்சு. இனி பயம் வேணாம். எல்லாரும் கட்டாயமா பேர் பதிஞ்சிட்டு உங்கட ஆக்களோட அம்மா அப்பாவோட போங்க” என்பதை மணிக்கு நூறுமுறைசொல்லிக் கொண்டிருந்தார்கள். அது மேமாதத்தின் 16 ஆம் திகதி.
தண்ணீரை தாராளமாகக் கொடுத்தான். ஆனால் போத்தல் குடிநீர் போதவில்லை. முந்தியவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. தண்ணீரை தேடிப்போகும் எண்ணம் எனக்கு வரவில்லை. அதற்காக தாகம் இல்லை என்றில்லை. ஓரமாக நினறு வருபவர்களை அவதானித்து கொண்டிருந்தேன்.
நாதன் எதிர்பார்த்துக்கொண்டிந்த சந்தியாவும் கங்காவுடன் வந்துசேர்ந்தாள். பின்னர் பதியும் இடத்திற்கு சென்றோம். பட்டப்பகல்போன்ற வெளிச்சத்த்ல் நிற்காமல் சிறிது மங்கலான இடத்திலிருந்து பதிபவர்களிடம் செல்லவே விரும்பினோம்.
முகங்களை பார்த்து எவரிடமும் கதைக்க விருப்பமில்லை. எனினும் நடந்துகொண்டிருந்த என்னை கையைப்பிடித்து நிறுத்தினான் ஒரு படையினன்.
“நான் பதியிறது. வாங்க. பேர் சொல்லுங்க” என்றபடி பதிவதற்கான காகிதத்தையும் எழுதுகோலையும் எடுத்தான். நான் பெயரை சொல்லமுன் படையினருக்கு முன்னேவந்து தொப்பென விழுந்தான் ஒரு பையன்.
“ஐயா தண்ணி தண்ணி” என்று குடிப்பதுபோல சைகைகாட்டி கெஞ்சினான்.
அவனுக்கு இருபுறமுமாக விழுந்துகிடந்த அவனது ஊன்றுதடிகள் எலும்பும் தோலுமாக இருந்த அவனது தோற்றம் மிகுந்த பரிதாபத்துக்குரியதாய் இருந்தது.
வேலிக்கு அப்பால் நின்ற படையினரிடம் பதிபவன் சிங்களத்தில் ஏதோ சொல்ல அவர்களுக்கு சொன்னவனை முறைத்துப்பார்த்து ஏசிவிட்டு சென்றார்கள்.
அதன்பின் அவனே எழுந்துசென்று சிறிய தண்ணீர்” போத்தல்கள் இரண்டை கொண்டுவந்தான். தண்ணீர்கேட்ட பையனோ தன்னை சமாளிக்க இயலாமல் நிலத்திலிருந்த புற்களை பிய்த்து நிலத்தை பிறாண்டினான் ஒரு பைத்தியகாரனைப்போல.
படையினன் தண்ணீரை நீட்டமுன் அதை பறித்தவன் மூடியை திறந்தான். திறபட மறுத்த மூடியை பற்களால் கடித்துப்பிடுங்கி துப்பினான். மடமடவென தண்ணீரை குடித்தான். அரைப்போத்தல் தண்ணீரையும் குடித்துவிட்ட அவன் பலமாக மூச்சுவாங்கினான்.
அவனுக்குபு குப்பென்று வியர்த்தது. பயங்கரமாய் மூச்சு வாங்கிவிட்டு மிகுதித்தண்ணீரையும் மளமளவென குடித்தான். அவனையே பார்த்துக்ககொண்டிருந்த படையினன் அடுத்த போத்தில் தண்ணீரை என்னிடம் தந்தான்.
“நன்றி” என்றபடி நானும் வாங்கிக்ககொண்டேன். அதன் மூடியை இலகுவாக கழற்ற முடியவில்லை. அல்லது அதை திறக்கும் சக்தி என் விரல்களுக்கு இருக்கவில்லை. அருகில் நின்ற இன்னொரு போராளிப்பையனிடம் நீட்டினேன்.
“குடிச்சிட்டு எனக்கும் தாங்க அக்கா” என்றபடி அவன் போத்திலின் மூடியை அகற்றிவிட்டு தந்தான். நானும் பருகிவிட்டு அவனிடம் கொடுத்தேன். அதுவரை பொறுமையாக இருந்த படையினன் கதிரையில் அமர்ந்தான்.
“தங்கச்சி பேர் சொல்லுங்க” என்றுகேள்விகளை கேட்கத் தொடங்கினான். எலும்பும் தோலுமாக படையினனின் அருகில்கிடந்த பையன் இன்னமும் அந்தரப்பட்டுக்ககொண்டிருந்தான்.
அண்மை நாட்களில்தான் காயமடைந்திருப்பான் போலும். குருதியிழப்பே அவனை அவ்வளவு சோர்வடைய செய்திருக்கிறது. நானும் பதிவை கொடுத்துவிட்டு சந்தியாவுக்காக காத்திருந்தேன். அவர்களும் பதிந்துவிட்டுவர நேரம் இரவு பத்து மணியை தாண்டிவிட்டது. மூவருமாகச் சென்று மக்களிடையே அமர்ந்துகொண்டோம். என்ன சொல்வதென்று புரியவில்லை.
பசியோ தாகமோ களைப்போ எதுவுமே தெரியவில்லை. ஆனால் எல்லாம் இருந்தனதான். என் சுடிதாரின் தோள்துண்டை விரித்து மூவரும் நிலத்தில் சரிந்தோம். வானம் இருளாகவே இருந்தது, கண்ணுக்கெட்டிய தூரம்வரை மின்குழிகள் எரிந்துகொண்டிருந்தன.
இருந்திருந்துவிட்டு வட்டுவாகல் தாண்டிய பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டுக்ககொண்டுதான் இருந்தன. எனக்கு தலைவலித்தது. மூளை களைத்துப்போனதால் ஏற்பட்ட வலி. கண்களை மூடிக்கொண்டு அமைதியாக கிடக்கத்தான் முயன்றேன்.
அந்த இரவு மிகவும் கொடியதாய் இருந்தது. இப்போதைக்கு விடியமாட்டேன் என்றது. நித்திரையுமில்லாத விழிப்புமில்லாத அரைமயக்க நிலையில் கிடந்த என் கால்கள் வலித்தன. நாரி அறுந்துவிடுமளவுக்கு உளைந்தது.
சற்றே திரும்பக்கூட இடமற்று நெருங்கிக்ககொண்டு கிடந்த என் உடலால் வேதனையை தாங்கிக்ககொள்ள முடியவில்லை. தாங்க இயலாமல் கண்களில் வழிந்த துயரத்தை துடைத்தபடியே அந்த நீண்டதான இரவை கழித்தேன்.
அடுத்தநாள் விடிந்துவிட்டது. 17.05.2009 பொழுது புலர்ந்தபோது பிரமிப்பாக இருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் வெட்டைவெளி முழுவதையும் நிறைத்துக்கிடந்தார்கள்.
அழுக்கு ஆடைகளோடு குழப்பமான உணர்வுகளோடு நின்ற அவர்களில் எவரும் எவருடனும் எதுவும் பேசிப்பகிரவில்லை. ஆளாளுக்கு தண்ணீர் தேடியும் உணவு தேடியும் அலைந்தார்கள்.
உடலால் இயங்கக்கூடிய மனிதர்கள் ஆயிரக்கணக்கானோரிடையே அடிபிடிப்பட்டு அவற்றை கொண்டுவந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் உணவுப் பொதிகளுடனோ தணணீர் போத்தில்களுடனோ போவதையும் வருவதையும் காணமுடிந்தது.
சிலர் தம் உடைகளையும் நனைத்துக்கொண்டு சென்றார்கள். “ஒரு போத்தில் தண்ணிக்காககூட இரத்தம் சிந்தவேண்டி இருக்கு” என்றபடி எங்களை கடந்து சென்றவரை அவதானித்தேன். அவரது கெண்டைக்காலில் இருந்து குருதி வழிந்துகொண்டிருந்தது.
கொஞ்சத் தண்ணீருக்கு தொகையானவர்கள் போட்டி போடுவதால் ஏற்படும் தகராறுகளை போக்க படையினர் வரிசையில் நிற்கச் சொன்னார்களாம். வரிசையில் நின்றால் கிடைக்காதென்று அதை குழப்பிக் கொண்டு நின்ற அனைவருக்கும் மட்டையடி விழுந்ததாம்.
இப்படியான கதைகள் கேள்விப்படவே தண்ணீர் வேண்டாம் என்றுவிட்து என் உள்ளுணர்வு. இடிபட்டுப்போய் ஒரு குவளை தண்ணீரைகூட எடுத்துவர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அடடா பதியும் இடத்தில் தந்த போத்தலையாவது கொண்டு வந்திருக்கலாமே என்று கவலையாக இருந்தது,
பயணம் தொடரும்…
இறுதி நாட்களும் எனது பயணமும் – 07
ஆனதி
ஈழநேசன்


No comments:
Post a Comment