
திருகோணமலை கடற்படை தளம் அமைந்துள்ள வளாகத்தில் இரகசியத் தடுப்பு சித்திரவதை முகாம்கள் இயங்கிவருகின்றன என்று தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் அங்கு பலர் உள்ளதாகவும் காணாமற்போனோரைத் தேடியறியும் குழு அறிவித்துள்ளது.
கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் இந்த முகாம்களில் காணாமல்போனோர்களில் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கருத்து வெளியிட்ட காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரன் திருகோணமலை கடற்படை தளம் அமைந்துள்ள அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் இரகசிய தடுப்பு சித்திரவதை முகாம்கள் இயங்கிவருகின்றன என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. காணாமல்போனோரின் உறவினர்கள் தமது உறவுகள் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
காணாமல்போன தனது கணவரை திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள இரகசியத் தடுப்பு முகாமொன்றில் தான் சந்தித்துப் பேசினார் என பெண்ணொருவர் எம்மிடம் கூறியுள்ளார். பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு அவர் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
எது எப்படியிருப்பினும் இரகசிய முகாம்கள் குறித்து எமக்கு நம்பகரமான தகவல் கிடைத்துள்ளது. இரகசிய முகாம்கள் அங்கு இயங்குகின்றனவா என அது தொடர்பான உண்மைத்தன்மையை அரசு கட்டாயம் வெளியிடவேண்டும். காலத்தைக் கடத்தாது வெகுவிரைவில் இது தொடர்பாக தெளிவுபடுத்துமாறு நாம் அரசைக் கோருகின்றோம் என்றும் அவர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டுள்ளார்.


No comments:
Post a Comment