
மன்னார், நாச்சிக்குடா கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிப் பெண்கள் பயிற்சி முகாம் அமைந்திருந்த இடத்தில் தற்போது சிறிலங்காவின் பாரிய நிரந்தரக் கடற்படைத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாரிய கடற்படைத்தளத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.
கடற்புலிகளின் தளம் முன்னர் அமைந்திருந்த பகுதியிலேயே புதிய நிரந்தர கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார், பூநகரி வீதியின் ஓரமாக அமைந்துள்ள இந்தத் தளம் கடற்படையின் வடமத்திய கட்டளைத் தலைமையின் கீழ் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படைத் தளமாக மட்டும் இல்லாமல் கடற்படையின் ஈரூடகப் பிரிவாக (மரைன் யூனிட் தரையிலும் தாக்குதல்களை நடத்தக்கூடிய கடற்படை) இது செயற்படும் என்று கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொறுப்பு வாய்ந்த தந்திரோபாய பகுதியில் இந்த கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கடற்படைத் தளபதி, மேற்குக் கரை ஊடாக ஆயுதங்களும் ஏனைய பொருள்களும் கடத்தப்படுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.
இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிப் பெண்கள் பயிற்சி முகாம் ஒன்று அமைந்திருந்தாக கடற்படை தெரிவிக்கிறது.


No comments:
Post a Comment