தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், தூத்துக்குடியில் ஷிப்பிங் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். மார்கழி 16 என்ற படத்தை எடுத்துள்ளார். இவரது மனைவி பிளவர் தூத்துக்குடி மாநகராட்சி 16-வது வார்டு தி.மு.க.கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் ஜெயவிஷால் உமேஷ் ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். ராஜ்குமார், பிளவர் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி கார் டிரைவருடன் பள்ளிக்கு சென்ற உமேஷ் கடத்தப்பட்டான். கடத்தல்காரன் கார் டிரைவர் கருப்பசாமியின் செல்போனில் இருந்து பிளவரைத் தொடர்பு கொண்டு ரூ. 5 கோடி பணம் கேட்டான். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் கருப்பசாமியும், உமேஷும் தென்பாகம் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
அவர்களை விசாரித்ததில் கருப்பசாமி மற்றும் சிறுவனின் வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. இதையடுத்து உமேஷ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். உமேஷை கார் டிரைவர் கடத்தியிருப்பாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜ்குமாரிடம் பணம் பறிப்பதற்காக தானும், தனது கூட்டாளிகளும் சேர்ந்து தான் உமேஷை கடத்தியதாக கருப்பசாமி ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் கருப்பசாமியின் கூட்டாளிகளான அசோக், மகேஷ், லட்சுமி காந்தன், ஜெகன், முருகேஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
இது குறித்து தூத்துக்குடி எஸ்பி நரேந்திர நாயர் கூறுகையில்,
சிறுவனைக் கடத்தி ராஜ்குமாரை மிரட்டி பணம் பறித்து சொகுசாக வாழலாம் என்று கார் டிரைவர் கருப்பசாமி தனது கூட்டாளிகளுக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனால் அவர்கள் சிறுவனைக் கடத்தியுள்ளனர். அவர்களுக்கு பணம் கிடைக்காததோடு, எங்கள் வலையிலும் சிக்கினார்கள் என்றார்.
No comments:
Post a Comment