தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் இன்று ( 25-ம் தேதி) தனது 59-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளையும், ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கினார்.
அவர் வழங்கிய நலத்திட்ட உதவித் தொகை விவரம் வருமாறு,
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் 55 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை பட்டாக்கள்
விரும்பாக்கம் பகுதிக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ்
படுகொலை செய்யப்பட்ட தென்சென்னை மாவட்ட 138-வது வட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ. 1.25 லட்சம் நிதியுதவி
எம். ஜி. ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் நன்கொடை
விபத்தில் பலியான ஆரணி சட்டசபை தொகுதி தேமுதிக தொண்டர் நாராயணசாமி குடும்பத்துக்கு ரூ. 40 ஆயிரம் நிதியுதவி
மொத்தம் ரூ. 3 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்த சாரதி, மாவட்ட தலைவர்கள் யுவராஜ், செந்தாமரைக்கண்ணன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது:
முன்னதாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிருபர்களை அவர் சந்தித்தார். அப்போது தேமுதிக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்று புகார் எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு,
புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தை பிறக்க சிறிது காலம் காத்திருக்க வேண்டும். உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. திருமணமாகி, குழந்தை பிறப்பதற்கு 10 மாதங்கள் ஆகிறது. அந்தக் குழந்தை எழுந்து நடப்பதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதுபோல் எதற்கும் ஒரு கால அவகாசம் உண்டு.
குறைந்தது 6 மாதங்கள் வரையாவது அரசின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அடுத்த ஆண்டு பட்ஜெட்டின் போது, இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து தெளிவாக கருத்து சொல்கிறேன் என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்று கேட்டதற்கு, அந்தத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், கூட்டணி குறித்தும் இப்போது கருத்து சொல்ல முடியாது என்றார்.
No comments:
Post a Comment