ஈழத்தில் சொல்லமுடியாத இன்னல்களை அனுபவித்து உயிர் அச்சுறுத்தலால் கப்பலில் அல்லது விமானத்தில் ஏறி வெளிநாடுகளில் தஞ்சமடைகின்றனர் ஈழத் தமிழர்கள். கப்பலில் ஏறி உயிரைக் கையில் பிடித்து மரணபயம் தொடர ஒரு நாட்டில் இறங்கி அகதிகள் அந்தஸ்துக்கோரினால், அதுவும் கிடைப்பதில்லை பெரும்பாலான தமிழர்களுக்கு.
தச்சுத் தவறி விசாக் கிடைத்தால் அதனையும் பெற முடியாத நிலை காணப்படுகிறது என்றால், இந்த உலகில் பாவப்பட்ட இனங்களில் நாம் தான் முதலிடத்தில் உள்ளோம் என்று சொல்லலாம். ஆனால் சும்மா கிடைக்கும் விசாவுக்கு 11,000 பவுன்ஸுகளை அறவிடும் சட்ட நிறுவனங்களை நீங்கள் எங்கேயாவது பார்த்து உண்டா? இல்லை முழுக்காசைக் கட்டாதால் மண்டையை உடைக்கும் அளவுக்கு இவர்கள் செல்கிறார்கள் என்றாவது தெரியுமா?
தமிழர்கள் பிரித்தானியாவில் அகதிகள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும்போது, ஆங்கில மொழிப் பிரச்சனை காரணமாக, தமிழர்களால் நடாத்தப்படும் சட்ட நிலையங்களை அணுகுகின்றனர். இதனால் பணம் சம்பாதித்து கொழுத்த முதளைகளாகி, நீச்சல் தடாகங்களோடு லண்டனில் வீடுகளை வாங்கி செட்டிலான எத்தனையோ சட்ட வல்லுனர்களை நாம் பார்த்திருக்கிறோம். முன்னர் எல்லாம் கிரீன் பொஃம் என்பார்கள் (பச்சைப் படிவம்) இந்த பச்சைப் படிவத்தில் நாம் கையெழுத்துப் போட்டால் போதும், அதில் வேண்டிய தொகையை அவர்கள் நிரப்பிவிட்டு அரசாங்கத்திடம் மில்லியன் கணக்கில் பணத்தைக் கறந்துவந்தனர் சில தமிழ் சட்ட வல்லுனர்கள், ஏன் அவர்களின் நிறுவனங்களும் கூட. அவர்கள் சட்டம் படித்தவர்கள் அல்லவா அதனால் களவையும் நேர்த்தியாக மாட்டிக்கொள்ளாத வகையில் தான் செய்வார்கள். கண்டுபிடிப்பதே கஷ்டம். இருப்பினும் இதனை உணர்ந்த அரசாங்கம் இந்தப் பச்சைப் படிவத்தைப் பின்னர் நிறுத்தியது. ஆனாலும் காசு ஆசை ஆரைத்தான் விட்டது? மில்லியன் கணக்கில் கறந்த கைகள் சும்மா இருக்குமா? அப்படியே அதனை மக்களிடம் கறக்க ஆரம்பித்துவிட்டனர் சில தமிழ் சொலிசிட்டர்மார்!
இதன் உச்சக்கட்டம் தான் தற்போது அரங்கேறிவருகிறது. அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு, ஆனால் பல வருடங்களாக பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் சில தமிழர்களுக்கு தற்போது பிரித்தானிய அரசு விசாக்களை வழங்கிவருகிறது. நாம் ஒரு விடையத்தை இங்கே சரியாகக் கவனிக்கவேண்டும். அதாவது இது அரசாங்கத்தின் முடிவு.
அவர்கள் தாமாக முன்வந்து இதனை வழங்குகிறார்கள். இதற்கும் சட்ட வல்லுனர்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அரசு விசாவை வழங்க அதனைத் தாம் கஷ்டப்பட்டுப் பெற்றுக்கொடுத்ததாக சில தமிழ் சட்ட வல்லுன நிலையங்கள் தமிழர்களுக்குச் சொல்லி அவர்கள் தலையில் மிளகாய் அரைப்பது மட்டுமல்லாது, 11,000 பவுன்ஸுகளை இதற்கு கட்டணமாக கட்டவும் சொல்கிறார்கள். ஒருவர் 8,000 ஒருவர் 9,000 ஒருவர் 11,000 என்று இஷ்டத்துக்கு தன் வசதிக்கு ஏற்றால் போல பணத்தைக் கேட்கிறார்கள். இவ்வளவு காலமாக விசா இல்லாமால் ஒழுங்கான வேலையும் இல்லாமால் 2 பவுன்ஸுக்கும் 3 பவுன்ஸுக்கும் வேலைசெய்யும் தமிழர்களிடம் எங்கே இவ்வளவு பணம் இருக்கப்போகிறது ?
பணத்தைக் கட்டவில்லை என்றால் விசாவைத் தரமாட்டோம் என்பதும், விசாவைத் திருப்பி அனுப்பிவிடுவோம் என்று மிரட்டுவதும் அவர்களின் வாடிக்கை. சமீபத்தில் நடந்த பல உண்மைச் சம்பவங்கள் இதற்கு சான்றாக உள்ளது. சமீபத்தில் 5,000 பவுன்ஸ் கட்டினால் விசா எடுத்துத் தருவதாகக் கூறிய தமிழ் சொலிசிட்டர் ஒருவர், விசா வந்ததும் 13,000 பவுண்டுகளைக் கேட்டுள்ளார். இப் பணத்தின் தொகை குறைவாக உள்ள காரணத்தால், தாம் கொடுத்த விசாப் பேப்பரை இழுத்து பறிக்க முற்பட்ட குறிப்பிட்ட சொலிசிட்டர் அது நிறைவேறாது போக, அங்கே ஏற்கனவே தான் வைத்திருந்த அடியாட்களை வைத்து இந்த நபர்களைத் தாக்கியுள்ளார். அத்தோடு நின்றுவிடாது தானே உள்ளே சென்று ஒரு இரும்புக் கம்பியை எடுத்துவந்து விசாப் பெறச் சென்ற நபர்களைத் தாக்கியும் உள்ளார்.
இதனால் விசாவைப் பெறச் சென்ற தமிழர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் கொடுத்த முறைப்பாட்டில் பொலிசார் குறிப்பிட்ட சொலிசிட்டரை கைதுசெய்துள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஒரு தொழிலுக்கு செய்கூலி அல்லது விலை நிர்ணயம் உள்ளது ! அதனை ஒரு அளவுக்கு மேல் அறவிடமுடியாது என்ற கட்டுப்பாடுகளும் பல சட்ட வரைமுறைகளும் இருக்கின்றமை பல தமிழர்களுக்குத் தெரியாது. இதனைக் கண்காணிக்க சில நிறுவனங்களும் உள்ளது. ஆனால் ஏன் நாம் அங்கே செல்லவேண்டும், அவர்கள் கேட்கும் காசை எப்பாடுபட்டாவது கொடுத்துவிடலாம் என நினைக்கும் தமிழர்களின் மனப்பாங்கு இவர்கள் போன்ற பல சட்ட வல்லுனர்களின் அடாவடிக்கு வித்திட்டுள்ளன எனலாம்.
எனவே பிரித்தானிய வாழ் தமிழர்களே! நீங்களும் இதுபோல சிக்கலில் மாட்டி இருந்தால். அல்லது தேவைக்கு அதிகமாக பல மடங்கு காசை உங்கள் சட்ட வல்லுனர்கள் கேட்டால், அல்லது ஏமாற்றப்பட்டிருந்தால் நீங்கள் கீள் காணும் இலகத்தில் தொடர்புகொண்டு பேசுங்கள். ஆங்கிலம் தெரியாது என்று ஒரு நாளும் நினைத்து உங்களை நீங்களே தரம் தாழ்த்தவேண்டாம். முடிந்தவரை கதைத்து உங்கள் பிரச்சனைகளைச் சொன்னால் அவர்கள் உதவி உங்களுக்கு நிச்சயம் உண்டு.
இது பிரித்தானிய அரசின் உதவியோடு உங்களுக்காக நடத்தப்படும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க விடையம். இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் பெரும் பணத்தை வாரி இறைத்து தமிழ் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்கிறார்கள். இவர்கள் யார் என்ன செய்கிறார்கள் என்று சற்றும் சிந்திக்காமல் தமிழ் தொலைக்காட்சிகளும் பணத்துக்காக இதுபோன்றவர்களின் விளம்பரங்களை போட்டுகின்றன. இதனை நம்பும் தமிழ் மக்கள் இறுதியில் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதனை எவரும் மறுப்பதற்கு இல்லை.
தொலைபேசி இலக்கங்கள்: 0844 477 2020
அதிர்வு
No comments:
Post a Comment