வடமேற்கு லண்டன் பகுதிகளைச் சேர்ந்த சவுத்ஹோல் தமிழ்க் கல்விக்கூடம், ஹெயிஸ் தமிழ்க் கல்விக்கூடம், கிலிங்கடன் தமிழ்க் கல்விக்கூடம், கவுண்சிலோ தமிழ்க் கல்விக்கூடம் ஆகியன இந்த வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றின.
கடந்த சனிக்கிழமை (09-07-2011) காலை 9:30 க்கு ஆரம்பமான இந்த விளையாட்டுப்போட்டி மாலை 8:30 வரை நடைபெற்று பின் வெற்றியாளர்களுக்கான பரிசில்களும், வெற்றிக் கொண்ணங்கள் மற்றும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டு இரவு 10:00 மணியோடு நிறைவுபெற்றது.
அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த விளையாட்டுப்போட்டியில் முதலில் பிரித்தானியத் தேசியக் கொடியும், பங்குபற்றிய பாடசாலைகளின் கொடிகளும் ஏற்றப்பட்டது.
இதில் பிரித்தானியத் தேசியக் கொடியை பிரித்தானியாவிற்கான தமிழ்க்கல்விக்கூடங்களின் பொறுப்பாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் ஏற்றிவைக்க, பாடசாலைகளின் கொடிகளை அந்தந்தப் பாடசாலைகளின் அதிபர்கள் ஏற்றிவைத்தனர்.
இந்த விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், என்பனவும், குண்டெறிதல், ஈட்டி எறிதல், கூடைப் பந்து, மற்றும் சிறுவர்களுக்கான பந்து பொறுக்குதலோடு 50 மீட்டர் ஓட்டம், தேசிக்காய் கரண்டி, மற்றும் பார்வையாளர்களுக்கான 400 மீட்டர் ஓட்டம், கயிறிழுத்தல் போட்டி, ஆசிரியைகளுக்கான பந்து கைமாற்றுதல் போன்றன இடம்பெற்றது.
பரிசில்களை விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த அப்பிரதேச மேஜர், மற்ரும் பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு வெற்ரிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கான பரிசில்களையும் வழங்கி கெளரவித்தனர்.
குறிப்பாக தாயகத்தில் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் வர்ணங்களினால் இல்லம் அமைக்கப்படுவது போல் இங்கும் கவுண்சிலோ தமிழ்க் கல்விக்கூடம் சிவப்பு நிறத்திலும், சவுத்ஹோல் தமிழ்க் கல்விக்கூடம் மஞ்சள் நிறத்திலும், ஹெயிஸ் தமிழ்க் கல்விக்கூடம் நீல நிறத்திலும், கிலிங்கடன் தமிழ்க் கல்விக்கூடம் பச்சை நிறத்திலும் தமது இல்லங்களை அழகுற வடிவமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment