
வடமராட்சிப் பகுதியில் இரவு வேளையில் துப்பாக்கிகள் சகிதம் சென்ற படையினர் என நம்பப்படுகின்ற மூவர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பதிலுக்கு இளைஞர் குழுக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.
வடமராட்சியின் வல்வெட்டிப் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அப்பகுதியைச் சேர்ந்த உள்ளுர் இளைஞர் ஒருவர் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படுகின்ற படையினர் மூவர் மதுபோதையில்
பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வீதியால் சென்ற பெண்கள் மீதும் அவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் அவர்கள் கெடுபிடிகளைக் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஊர் மக்கள் திரண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக வந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றை விட்டு விட்டு இவர்கள் தப்பியோடியுள்ளனர்.
அவ்வேளையிலேயே அவர்களால் எடுத்து வரப்பட்டிருந்த ரீ. 56 ரகத் துப்பாக்கி, இராணுவக் காலணி என்பவை மீட்கப்பட்டிருக்கின்றன. பின்னர் இவை அப்பகுதி மக்களால் பொலிசாரிடம் ஒப்படைப்பக்கட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே தப்பியோடிய படையினர் மீது ஊர் மக்கள் துரத்தித் துரத்தி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


No comments:
Post a Comment