
இந்தியாவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கம் நிலை வரும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்:
மத்திய அரசாங்கத்தை சர்வதேவ சமூகம் மட்டும்தான் பணிய வைக்கமுடியும். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே ஈழம் கூடாது என்பதுதான். என்றைக்கு ராஜபக்சேவோடு இந்தியாவுக்கு கடுமையான முரண்பாடு ஏற்படுகிறதோ, அன்றைக்கு இந்தியாவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கிற நிலை வரும். விடுதலைப்புலிகளை ஆதரித்து தமிழீழம் வாங்கி தருகிறோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பார்கள்.
இந்திராகாந்தி அம்மையார் அன்றைக்கு ஜெயவர்த்தனே அரசை மிரட்டுவதற்காக போராளிகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுத்தார். போராளிகள் யாரும் அதை கேட்கவில்லை. அன்றைக்கு அவர்களுக்கு பயிற்சி கொடுத்தது இந்திய அரசுதான். ஆயுதங்கள் கொடுத்தது இந்திய அரசுதான். ஐந்து குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களுக்கு ஆயுதங்களை அள்ளி கொடுத்து, ஜெயவர்த்தனேவுக்கு எதிராக கலவரங்களை உண்டுபண்ணுங்கள் என்று சொன்னது இந்திய அரசுதான். ஜெயவர்த்தனே பணிந்த பின்னர், ஆயுதங்களை கீழே போடுமாறு போராளிகளிடம் சொன்னார்கள். அப்போது பிரபாகரன் மட்டும் அதனை மறுத்தார். உங்களுக்காக ஒன்றும் நாங்கள் ஆயுதம் ஏந்தவில்லை. எங்களுக்காகத்தான் ஆயுதம் ஏந்தினோம் என்று அன்று உரைத்தார். இதுதான் அவர்களுக்கிடையே இருக்கும் முரண்பாடு.
சர்வதேச அளவில் இலங்கை அரசோடு முரண்பாடு வரும்போது மட்டும்தான், இந்திய அரசு பணியுமே தவிர, தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டில் நடத்துகிற போராட்டங்களால் இந்திய அரசு பணியாது. சர்வதேச சமூகத்தின் அழுத்தம் வரும்போதுதான் ஈழம் கூடாது என்கிற இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை மாறும்.
இலங்கை அரசாங்கம் இந்தியாவை சார்ந்து இருக்கிற வரையில் இந்தியா ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருக்கும். ராஜபக்சே இந்தியாவை எதிர்க்கிற நிலையில், விடுதலைப்புலிகளை இந்தியா ஆதரிக்கும் நிலை வரும். இந்தியாவே விடுதலைப்புலிகளை மறுபடியும் உயிர்பிக்கும். சிங்கள அரசோடு இந்திய அரசாங்கம் முரண்படுகிறபோது இந்த நிலை ஏற்படும் என்றார்.


No comments:
Post a Comment