7/14/2011 9:58:56 AM
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் ராணா படப்பிடிப்பில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மே மாதம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல், நுரையீரல் நீர்கோர்ப்பு, சிறுநீரக கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகள் இருந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதிலும், நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், வெளிநாடு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து, மே 27ம் தேதி சென்னையில் இருந்து மகள், மருமகன் மற்றும் டாக்டர்கள் 7 பேருடன் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ரஜினி பூரணமாக குணமடைந்தார்.
அதன்பின், டாக்டர்களின் அறிவுரைப்படி அங்கேயே அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒரு மாதம் ஓய்வு எடுத்தார். அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் உடன் இருந்து கவனித்து வந்தனர். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ரஜினி சென்னை திரும்ப முடிவு எடுத்தார். அதன்படி, ரஜினி குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு சென்னை வருவதாக செய்தி வெளியானது.
ரஜினியை வரவேற்க ரசிகர்கள் கூட்டம் மாலை 6 மணியில் இருந்தே விமான நிலையத்தில் திரண்டனர். மேளதாளம், வாழ்த்து கோஷங்களுடன் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். இதனால், பன்னாட்டு விமான நிலையம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. ரசிகர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், ரஜினி வெளியே செல்வது கடினம் என்பதை விமான நிலைய அதிகாரிகள் உணர்ந்தனர். அதன்பின், விமான நிலைய அதிகாரிகள் டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ரஜினி வெளியே வரும் பாதையை பழைய விமான நிலையத்தின் கேட் எண்.6க்கு மாற்றினர். பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் பழைய விமான நிலையம் கேட் எண்.6க்கு என இரண்டு இடங்களிலும் திரண்டனர். இதை அறிந்த ரசிகர்கள் கூட்டம் கேட் எண்6க்கு படையெடுத்தனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் விமானத்தில் நேற்று இரவு 10.00 மணிக்கு சென்னை வந்தார். ரஜினியுடன், அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, நடிகை மானு ஆகியோர் உடன் வந்தனர். ரஜினியை வரவேற்க ரசிகர்களுடன், தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் விமான நிலையத்தில் காத்திருந்தார். விமானத்தில் இருந்து ரஜினி சிரித்தபடியே இறங்கினார். நீல கலர் ஜீன்ஸ் பேன்ட், வெள்ளை கலர் சட்டை, கருப்பு பிரேம் போட்ட கண்ணாடி, கொஞ்சம் வெள்ளை தாடியில் பழைய கம்பீர நடையுடன் ரஜினி காணப்பட்டார்.
எஸ்கலெட்டர் வழியாக வந்த ரஜினி, குடியுரிமை சோதனை, சுங்கச்சோதனை போன்ற பகுதிகளுக்கு உற்சாகமாக நடந்து வந்தார். சோதனைகள் அனைத்து முடிந்த பின்னர், சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு வேனில் ரஜினி குடும்பத்தினருடன் ஏறினார். பழைய விமான நிலையம் கேட் எண்.6க்கு சொகுசு வேன் வந்தது. கேட்டின் வெளியே கார் தயாராக இருந்தது. வேனை விட்டு இறங்கிய ரஜினி வெளியே இருந்த காரில் ஏறவில்லை.
அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி வந்தார். ரஜினிக்கு ரசிகர்கள் பூங்கொத்து, சால்வைகளை கொடுத்தனர். அவற்றை உற்சாகமாக ரஜினி பெற்றுக் கொண்டார். அதன்பின், கைகளை தலைக்கு மேல் உயர்த்தி ரசிகர்களின் உற்சாக வரவேற்பை நன்றியுடன் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்து விட்டு குடும்பத்தினருடன் காரில் போயஸ் கார்டன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!
No comments:
Post a Comment