
கார்த்திகை 27 ம் நாள், தமிழீழத் தேசிய மாவீரர் நாள் தமிழ்மக்களுக்காக, தமிழீழ நாட்டிற்காக, தங்களையே அர்ப்பணித்த தற்கொடையாளர்களை நினைவில் கொள்கின்றநாள்.
தரணியில் தமிழனை தலைநிமிரவைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரர்களை நெஞ்சினில் நிறுத்தி, தலைதாழ்த்தி மலர்தூவி வீரவணக்கம் செலுத்தும் நாள்.
இந்நாளில் நாம் எடுக்கின்ற உறுதிமொழி, களத்தில் காவியமான கதாநாயகர்களின் எண்ணங்களில் உறைந்திருந்த தமிழீழத் தாயக இலட்சியத்தை ஈடேற்றும்வகையில் ஒற்றுமையாய், ஒரணியில்திரண்டு தமிழனுக்கென்றோர் நாடு தரணியில் அமையப்பெற சத்தியம் செய்துகொள்வோம்.
நாம்வாழ, நமக்கென்றோர் நாடு அமைய, நெருப்பாய் எழுந்து தரையில், கடலில், வான்வெளியில் களமாடி சாவிலும் சரித்திரம் படைத்த மாவீரர்கள், முகம்தெரியாமல் முழுநிலவாக எங்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கின்ற சாதனை வீரர்கள், எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நாட்டுப்பற்றாளர்கள், எமது போராட்டத்துக்காக குரல்கொடுத்து செயல்பட்ட மாமனிதர்கள், மற்றும் இப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்த மக்கள் ஆகியோரை என்றும் எம் இதயத்தில் வைத்து ஆராதிப்போம்.
தாய் நிலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்பட்டபோதும் புலத்தில் எமதுமக்கள் ஒன்றுதிரண்டு எமது தேசிய வீரர்களை நினைவில் கொள்கின்றார்கள்.
இவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்கள், இவர்களின் உறவுகள் இந்நாளில் தாய்நிலத்தில் இல்லங்களிலிருந்து ஏங்குகின்றபோதும் புலத்தில் நாம் செலுத்துகின்ற வீர வணக்கம் நிலத்தில் நிம்மதியைக்கொடுக்கின்றது.
எமது தேசிய வீரர்களை என்றும் நாம் மறக்கக்கூடாது. அவர்கள் தங்களின் வாழ்வைப்பற்றி சிறிதளவேனும் சிந்திக்காது ஒட்டுமொத்த தமிழினத்தின் வாழ்வே தமது இலட்சியமென்று எதிரி படைகளை எமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க களமாடிய மாவீரர்கள்தான் எமது தேசிய செல்வங்களாகும்.
இவர்கள்தான் எமது வழிகாட்டிகள் என்பதையும் இந்நாளில் எமது மனங்களில் அழியாத நினைவாக வைத்துக்கொள்வோம்.
ஒன்றா, இரண்டா எண்ணற்ற வீரமறவர்கள் சிந்திய செங்குருதி, எமது மண்ணுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்குமென்ற உறுதி வீரம் செறிந்த விடுதலைப் போரில் வெளிப்பட்டது.
எங்கள் சந்ததியினரின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு எமது மண்ணில் தங்களை விதைத்தார்கள். நிச்சயம் வேரூன்றி விருட்சமாக எழுவார்கள். அப்போது எமது மக்கள் விடுதலையைப் பெறுவார்கள்.
20 ஆம், 21 ஆம் நூற்றாண்டுகளில் உலகில் நீதியான, நேர்மையான, எமது தேசிய இனத்துக்கான, வீரம்செறிந்த மாபெரும் விடுதலைப்போரை எமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடத்தியிருக்கின்றோம்.
நாம் உரிமையோடு, உலகில் தலைநிமிர்ந்து வாழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில நாடுகள் சிங்கள ஆக்கிரமிப்பளார்களுக்கு உதவி புரிந்ததின் மூலம் எமது வீர விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.
நாம் ஓர் பழமைவாய்ந்த மொழியைப்பேசுகின்ற தேசிய இனம் என்பதை உலகமக்கள் ஏற்றுக்கொள்ளும்காலம் வரும்போது எமது மக்கள் விடுதலைபெறுவார்கள். அதற்கான செயற்பாடுகளில் புலத்தில் வாழ்கின்ற எமது மக்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டும்.
தமிழர்களின் வரலாற்றில் சோழர்காலம் பொற்காலமாக கருதப்பட்டது. அதற்குப் பிறகு புலிகளின் காலமே பொற்காலமாகும். தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் என்றும் இதனை குறிப்பிடமுடியும்.
உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் நாம்தமிழர் , நமது மொழி தமிழ், நமது நாடு தமிழீழம், நமது தேசியகொடி புலிக்கொடி, நமது தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் என்பவை தொடந்தும் எமது சந்ததியினரின் மனதில் ஆழமாக பதியப்படவேண்டும்.
அப்போதுதான் எம்மால் உறுதியாக விடுதலையைப் பெறமுடியும். புலத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் சொல்லிலும், செயலிலும் எமது நாடு தமிழீழம் என்பதை ஏனைய இனத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.
சுயநலத்திற்கு அப்பால் தமிழ் மக்களின் உரிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அர்ப்பணிப்போடு செயலாற்றி ஒவ்வொரு மாவீரரின் நினைவில் அழியாத ஓவியமாக பதிந்துள்ள தமிழீழ நாட்டின் வரைபடம் உலகப்படத்தில் இடம்பெறவும், உலக அரங்கில் எமது தேசியக்கொடியான புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கவும், தொடர்ச்சியாக எமது மக்களின் குரல் ஒவ்வொரு நாடுகளிலும் ஓங்கி ஒலிக்கவேண்டும்.
எமது விடுதலைப் போராட்டத்தை விழுதுகள்போல் தாங்கிநின்ற மக்கள் , மாவீரர்களை ஈன்றெடுத்த பெற்றோர்கள், எமது வீரர்களோடு உறவாடி உதவிகள் புரிந்து விடுதலையை நேசித்தவர்கள் இன்னும் எமது மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
புலத்தில் வாழ்கின்ற மக்களை நோக்கிய வண்ணம் காத்திருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு உதவி புரிவது எமது கடமைகளில் ஒன்று என்பதை எப்போதும் நாம் மறக்கக்கூடாது. இதனை திடமாக இந்நாளில் புரிந்து கொள்வோம்.
மாவீரர்களின் நினைவுகளை சுமந்து அவர்களின் எண்ணங்களுக்கேற்ற விதத்தில் உலக மக்களோடு ஒன்று கூடி எமது உரிமையை பெற்றுக்கொள்வோம்
எழுகதிர்


No comments:
Post a Comment