
யாழ்ப்பாணத்தில் இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை சுவரொட்டிகளை ஒட்டி கொண்டாடுவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அதனை படையினர் தடுத்து விட்டதாகவும் சிறிலங்காவின் யாழ்.படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிலர் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை சிறிலங்காப் படையினர் தடுத்து விட்டனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று வழக்கமானதொரு நாளாகவே இருக்கும்.எந்தக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதையும் தடுப்பதில் கவனமாக இருப்போம்.
குடாநாட்டு வீதிகளில் படையினர் அதிகளவில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ரோந்துப் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு சிறிலங்கா காவல்துறையினருக்கு உதவ ஒரு தொகுதி படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகள் ஆதரவு சக்திகளை நாம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.“ என்றும் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment