ராஜீவ காந்தி மட்டும் இன்னேரம் இருந்திருந்தால், தூக்குக் கயிற்றுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ள மூவரையும் மன்னித்து அவர்களின் உயிரையும் காப்பாற்றியிருப்பார் என்று திமுக தலைவர் கருணாநிதி மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க வேண்டும். அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து விட்டனர். எனவே அவர்களை தூக்கில் போடக் கூடாது என்று சோனியா காந்திக்கும், மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் மீண்டும் ஒரு உருக்கமான கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மனித உரிமைக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான தூக்குத் தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்துவிடலாம் என சொல்லாத நாடுகளே இல்லை என கூறிவிடலாம்.
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதி தமது வாழ்நாள் முழுவதும் அந்த குற்றத்தை எண்ணி வருந்துவதைவிட தூக்கு தண்டனையால் பெரிய பயன் விளைந்துவிடப் போவதில்லை.
நம் உள்ளத்தை உருக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள, மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதை தடுத்து நிறுத்தி உதவிடும் பணி நம் கண் முன் பேருரு எடுத்திருக்கிறது.
ராஜீவ் காந்தி உயிருடன் இருதிருந்தால் கூட அவர்களை மன்னித்திருப்பார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரையும் மரணத்தில் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
தூக்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், அதன் பிறகு எத்தகைய தூய வாழ்க்கையைத் தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் நான். தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கடிதத்தை கருணை மனுவாக கருதி தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment