ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹனவுடன் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து சர்வதேச மன்னிப்பு சபை திருப்தியின்மையை வெளியிட்டுள்ளது.நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாலித கோஹன தலைமையிலான குழுவினர், இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று முழுமையாக மறுப்பு வெளியிட்டுள்ளனர்.
குறித்த சந்திப்பை, சர்வதேச மன்னிபபு சபை வித்தியாசமான அணுகுமுறையுடன் நடத்தியது. எனினும் இலங்கைக் குழுவினர், உறுதியான கலந்துரையாடலுக்கு இணங்காத நிலையில் குறித்த சந்திப்பு வெற்றி பெறவில்லை என்று சர்வதேச மன்னிப்பு சபையின் இலங்கைக்கான சிறப்பு நிபுணர் ஜிம் மெக்டொனாலட் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு, சர்வதேச மன்னிப்பு சபையின் தலைவர் ஜோஸ் லூயிஸ் டய்ஸக்கும் பாலித கோஹனவுக்கும் இடையில் இடம்பெற்றது.
குறிப்பாக இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான சனல் 4 காணொளி தொடர்பிலேயே கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து கருத்துரைத்த பாலித கோஹன, இலங்கையின் நீண்ட வரலாற்றை கொண்ட நீதித்துறை கலாசாரத்தை இந்த பிரச்சினைக்காக மாற்றிக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளுர் மட்ட விசாரணை போதுமானதா என்று மன்னிப்புச் சபையின் இலங்கைக்கான நிபுணர் மெக்டோனோலிடம் வினவியபோது, சர்வதேச விசாரணை அவசியமானது என்று குறிப்பிட்டார்.
இதேவேளை பாலித கோஹனவுடனான சந்திப்பின்போது சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அதனை பாலித கோஹன பலமுறை நிராகரித்ததாக மெக்டோனோல்ட் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment