
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் தீவகம் தவிர்ந்த அனைத்துப் பிரதேசங்களிலும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ததன் மூலம், தமிழீழ மக்கள் தமது தேசிய உணர்வினை மீண்டும் பதிவு செய்துள்ளார்கள்.
மிகப் பெரும் எடுப்பில், மகிந்த அரசு மந்திரி, பிரதானிகள் சகிதம் வடக்கிலும் கால் பதிக்கும் கனவோடு சிங்களத் தேசியவாதத்திற்கான கதவினைத் திறக்க முயன்றபோதும், அதனை முறியடித்து, ஈழத் தமிழர்கள்மீது இனப்படுகொலை புரிந்த போர்க் குற்றவாளிகளுக்குத் தமிழீழ மண்ணில் இடமே இல்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்கள்.
இத்தனை இழப்புக்களையும் எதிர்கொண்டு, அவலத்தையே வாழ்க்கையாகக் கொண்ட தமிழினம் அடங்கிப் போக மறுத்து, தமது தாயகக் கோட்பாட்டின் உறுதியைச் சர்வதேசத்திற்கு மீண்டும் ஒருமுறை அறைந்து சொல்லியுள்ளது.
தாயக மக்களின் இந்த மாறாத தமிழ்த் தேசியப் பற்று, புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் தாயக மீட்பிற்கான ஜனநாயக முறைமைப் போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது. தமிழீழம் தோற்காது என்ற நம்பிக்கையை உலகத் தமிழர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளது.
அதே வேளை, தீவகத்தில் சிங்கள வல்லூறுகளையும், அதன் அடிவருடிகளையும் ஆலாபனை செய்து, தமிழின அழிப்பை நடாத்தி முடித்த மகிந்த குளுவின் கையில் உள்ளுராட்சி சபைக்கான அதிகாரத்தை வழங்கியிருக்கும் தீவக மக்களது செயலுக்காக நாங்கள் வெட்கித் தலை குனிந்து நிற்கின்றோம். அதற்காக, தமிழ் மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோருகின்றோம்.
எதிர் காலத்திலாவது, தவறுகளுக்கான முன்னுதாரணமாகத் தீவக மக்களைச் சுட்டிக்காட்டும் கீழ் நிலைக்கு ஆளாகாதிருக்கவேண்டும் என்று தீவக மக்களை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அவமானகரமான அடிமைப்படுதல், எமது தேசிய அபிலாசைகளுக்குக் குந்தகமாக அமைவதோடு, நாளைய எமது சந்ததியினரையும் ஈனப் படுத்துவதாக அமைந்துவிடும். நக்கிப் பிழைப்பார் பின்னே நாம் அணி திரள்தல், நாளைய எம் சந்ததியையும் நாணித் தலை குனிய வைக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தவறுகளைத் திருத்தும் காலம் விரைந்து வரவேண்டும், எம்மீது படிந்து போயுள்ள கறைகள் கழுவப்பட வேண்டும்.
தீவக அபிவிருத்திச் சங்கம்


No comments:
Post a Comment