
இந்தியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளின் உரிமைகள் என்ன என்பது குறித்தான மனுவொன்று, நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த சனி-ஞாயிறு ஆகிய நாட்களில் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தமிழ் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இதனைத் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தனதுரையில், இந்தியாவில் வாழும் திபெத்தியர்கள் தங்களுடைய திபெத்திய புகலிட அரசாங்கத்துக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றிருப்பதன் அடிப்படையில், இந்தியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளும், தங்களுடைய அரசியல் உரமைகளை வெளிப்படுத்தும் உரித்துடையவர்கள் என்பதனை முன்னிறுத்தியே, நீதிமன்ற மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மனுதொடர்பிலான நீதிமன்ற முடிவின் அடிப்படையில் இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலை நடாத்துவதற்கு எண்ணியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்சபையிலும் இந்திய வள அறிஞர்கள் பலரும் உள்ளடக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
நாடுகடந்து வாழும் ஈழத்தமிழ் மக்களின் உணர்வெழுர்;ச்சியின் ஒட்டுமொத்த சனநாயக வடிவமாக தோற்றம் பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இன்று பல்வேறு இராஜதந்திர உறவுகளை பேணிவருதோடு, தென் சூடான், வடஅயர்லாந்தினை தொடர்ந்து, தென்னாபிரிக்காவுக்கும் நா.த.அரசங்கத்தின் உயர்மட்டக்குழு நேரடியாக சென்று இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
பலமே விடுதலையை வென்றெடுப்பதற்கான அடிப்படை அச்சாணி என்ற தமிழீழ தேசித் தலைவரின் கூற்றினை தனதுரையில் கோடிட்டுக்காட்டிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இன்றைய உலக ஒழுங்கு ஒவ்வொரு நாடுகளது பலத்தினதும், நலன்களினதும் அடிப்படையிலேயே இயங்குகின்றதென குறிப்பிட்டு, முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழவிடுதலைப் போராட்ட அரசியல் பலத்தின், சனநாயக வலுமையமாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விளங்குகின்றதென இடித்துரைத்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது, ஈழமக்களால் மட்டும் நடாத்தப்படுகின்ற போராட்டமாக அன்றி, அது உலகம் முழுவதும் உள்ள 80 மில்லியன் உலகத் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமாக மாற்றங்கொள்ளவேண்டுமென தெரிவித்தார்.
இதேவேளை, நாளை மலரப் போகும் தமிழீழ அரசு, ஈழத் தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுக்கின்ற அரசாகவே அமையுமென எடுத்துரைத்தார்.
இதற்கு முன்னுதாரணமாக, சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்காக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குரல் கொடுத்திருப்பதை நினைவூட்டிய பிரதமர் அவர்கள், இவ்விவகாரத்தை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதையும் எடுத்துரைத்தார்.
தென்னாசியப் பிராந்தியத்தில் வளந்து வரும் சீனாவின் ஆதிக்கம் குறித்து, தென்னாசிய பிராந்திய அரசுகள் மட்டுமல்ல உலக அரசுகளுக்கும் தங்களுடைய இந்து சமுத்திர அரசியல் நிலைப்பாடு தொடர்பில் மீளாய்வு செய்துவருகின்றனர் என தெரிவித்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழ்த் தேசியத்தின் நலன்கள், எந்த நாட்டின் நலன்களுடன் ஒத்துப் போகின்றது என்பனை ஆராய்ந்து, ஒரே தளத்தில், அறிவியல்-அரசியல் இராஜதந்திர வழியில் பயணிக்கின்ற வகையில், கொள்கை வகுப்பாளர் நோக்கியதான, வல்லுனர்களை உள்ளடக்கியதான ஒரு இராஜதந்திர குழுவொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருப்பதையும் இங்கு வெளிப்படுத்தினார்.
உலகமயமாகியுள்ள இன்றை உலக ஒட்டத்தில், சிறிய நாடுகள் தனித்து இயங்கிவிட முடியதென குறிப்பிட்டு, புறநிலைச் சகத்திகள் ஊடாக தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்கான மாற்றங்களை, இலங்கைத்தீவில் கொணடு வரமுடியுமென நம்பிக்கை தெரிவித்தார்.
யூத இனப்படுகொலையைத் தொடந்து, இனப்படுகொலைகளுக்கு எதிராகவும், தடுப்பதற்குமான உலகளாவிய சட்டமொன்று இயற்றப்பட்டு, 140நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என எடுத்துரைத்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், அந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ளதா நாடுகளுக்களையும் மரபுவழிச் சட்டமாக கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டுள்ளதென குறிப்பிட்டார்
அந்த சட்டவரைவில், இனப்படுகொலையென்பதற்கு வழங்கப்பட்டுள்ள 5 கோட்பாட்டு குற்ற வரைவுகளில் பல, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் மறைமுகமாக உள்ளதென குறிப்பிட்டார்.
றுவாண்டா, யுகோசெலவியா, சேர்பியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற, இனப்படுகொலை விவகாரத்தில், அனைத்துலக நீதிமன்றம் முன்னவைத்த குற்றவியல் கோட்பாட்டு வரைவுகள், ஈழத்தமிழினத்தின் மீது நடாத்தப்பட்டு வருகின்றமை, ஒரு இனப்படுகொலைதான் என்பதற்கு போதுமானதாக உள்ளதென தெரிவித்தார்.
இதற்கு தகுந்த சாட்சியாக சனல்-4 ஆவணப்படம் உள்ளதென குறிப்பிட்டார்.சிங்கள சிப்பாய்களால் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளே, இன்று இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக மாறியுள்ளமைய சுட்டிக்காட்டிய பிரதமர் அவர்கள், சிங்கள் பேரினவாத முகத்தை மூடிமறைத்து விடமுடியாதென தெரிவித்தார்.
1948ம் ஆண்டு, இஸ்றேல் என்ற ஒரு நாடு உருவாவதற்கு, அமெரிக்க இராஜாங்க திணைக்களமோ, அல்லது அமெரிக்க வர்த்தக-பொருளதார மையங்களோ ஏற்கவில்லை. ஆனால் அமெரிக்க யூத மக்களினதும், பொதுமக்களினதும் கருத்தலைகளே, இஸ்றேல் என்ற நாட்டை ஏற்றுக்கொள்ள வைத்ததென்பதனை நினைவூட்டிப் பேசிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இதுபோலவே சனல்-4 ஆவணபடமும், உலக மக்களது கண்களை தமிழீழம் நோக்கி திறங்க வைக்குமென நம்பிக்கை வெளியிட்டார்.
நிறைவாக, முள்ளிவாய்க்கால் பேரவலம், தமிழர் தேசியத்தேசியத்தின் வராற்றுத் துயரெனவும் அதுவே தமிழீழத்தின் திறவுகோல் எனவும் உறுதியுரைத்தார்.


No comments:
Post a Comment