இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தப்பியோடிய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் நாடு பூராகவும் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர். இவர்கள் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.சர்வதேசம் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை இல்லாதொழிப்பதற்கான தீய சக்திகளின் செயற்பாடுகள் தொடர்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் டி.எம். ஜயரத்ன இதனைத் தெரிவித்தார்.
இங்கு பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், மனிதாபிமான படை இறுதி நடவடிக்கையின்போது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய பெரும்பாலான பயங்கரவாத உறுப்பினர்கள் தென்பகுதிக்கு தப்பி வந்தனர். இவ்வாறான பயங்கரவாத உறுப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கு அழிவுகளை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட பெரும் தொகையான ஆயுதங்கள், வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அத்தோடு தப்பிச் சென்ற புலி உறுப்பினர்கள் பலர் இன்றும் நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர். இவர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்கள் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானச் சூழ்நிலைலயில் மீண்டும் திரும்பி வர ஆரம்பித்துள்ளனர்.
புலிகளின் செயற்பாடுகளை அங்கீகரிக்காதாலேயே அம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அம் மக்கள் மீண்டும் இங்கு வந்து அமைதியான வாழ்வை நடத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறார்கள்.
அத்தோடு இதுகாலவரையில் மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று குறை நிறைகளை கேட்டறிய முடியாது தத்தளித்துக் கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்கள் மத்தியில் நேரடியாகச் செல்லும் வாய்ப்பையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது. இது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். வடக்கு கிழக்கு மக்களுக்காக அரசாங்கம் அன்று ஒதுக்கிய நிதிகள் விடுதலைப் புலிகளையே பெருமளவில் சென்றடைந்தது.
ஆனால் இன்று அந்த நிலைமையில்லை. அரசாங்கத்தின் நிதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் வடக்கு கிழக்கு மக்களை நேரடியாகச் சென்றடைகின்றன.
முப்பது வருடகால யுத்தத்திற்குள் சிக்கியிருந்த அம் மக்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்து வாழ வைப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்ப்படுகின்றது.
ஈழம் என்ற புலிகளின் கொள்கை மக்களால் நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னரான ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் இன்றும் அரசுடன் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
வடக்கு கிழக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் வாழும் மக்கள் பிரச்சினைகள் தோன்றும்போது ஒன்றிணையும் நிலைமை இன்று தோன்றியுள்ளது.
பகைமை வன்முறை குரோதம் நிறைந்திருந்த காலம், கணவர், மனைவி, பிள்ளைகள் வீடு திரும்புவார்களோ குண்டுகள் வெடிக்குமோ என்று அச்சத்துடன் மக்கள் வாழ்ந்த காலம் இல்லாதொழிக்கப்பட்டது.
பயங்கரவாதம் அழிக்கப்பட்டது. இன்று மக்கள்அமைதியாக வாழ்கின்றனர். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் நீறுபூத்த நெருப்பாக மீண்டும் பயஙகரவாõத சக்திகள் அழிவுகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்ட போதும் தேசிய பாதுகாப்பை அரசாங்கம் பலப்படுத்தியதால் அம் முயற்சிகள் தோல்வியடையச் செய்யப்பட்டன.
எனவே சர்வதேச ரீதியில் நாம் பெறும் வெற்றிகளை கண்டு கோபாவேசம் கொண்டுள்ள சர்வதேச சக்திகளின் இன்னமும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
இதன் மூலம் சர்வதேசம் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை இல்லாதொழிப்பதே இச் சக்திகளின் நோக்கமாகும்.
கடந்த மாதத்திற்குள் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஆகும்.
இத்தொகையோடு இதுவரையில் 7476 புலி இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்திற்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வாழ்வதற்கான அடித்தளத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஒழிக்கப்பட்ட பயங்கவாதத்தை மீண்டும் கட்டியெழுப்ப வெளிநாடுகளிலிலுள்ள விடுதலை புலி ஆதரவானவர்கள் அரச விரோத சக்திகள் மற்றும் அமைப்புக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு வடக்கு கிழக்கு மட்டுமல்ல, தாய்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பயங்கரவாத உறுப்பினர்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பிலான தேடுதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இத் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும் என்றும் பிரதமர் சபையில் தெரிவித்தார்.


No comments:
Post a Comment