ஆனால் பாதிக்கப்பட்ட மக்களாகிய ஈழத்தமிழர்கள் இன்று எந்தவித ஒற்றுமையுமின்றி நாளுக்குநாள் பிரிவினைகள், கோபதாபங்கள், அரசியல் வேறுபாடுகள் போன்று சகல விடயங்களிலும் ஒற்றுமையின்றியே காலத்தைக்கழிக்கின்றனர்.
இது திட்டமிட்ட சதி என்றே நாம் கருதவேண்டி உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஆயுதப் போராட்டம் இன்று மௌனித்து இருந்தாலும், தமிழீழ மக்களின் அரசியல் போராட்டம் எதிர் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரையுடன் நடைபெறாது என்பதில் சிலர் அல்ல பலர் கங்கணம் கட்டிநிற்கிறார்கள்.
சிலர் தமது ஆய்வுக் கட்டுரை என்றுகூறும் அலட்டல் கட்டுரைகளில் வெளிப்படையாக கூறாவிட்டாலும் மறைமுகமாக தேசியத்தலைவர் பிரபாகரனின் தலைமையை, வழிகாட்டல்களை இப்பொழுது கடுமையாக விமர்சிக்கின்றனர்.
1997ம் ஆண்டிற்கு பின்னர்
இப்படியான பேர்வழிகளை உற்று ஆராயும் பொழுது இவர்கள் ஐரோப்பாவில் 1997ம் ஆண்டிற்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு விட்டது எனச் சாட்டுப்போக்குக் கூறி, தமக்குள் சில தமது ஐரோப்பிய தோழர்களுடன் கலந்து ஆலோசித்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டிற்கு சமனாக ‘கூட்டமைப்பு| என்ற பதத்துடன் இவர்களது செயற்திட்டங்கள் ஐரோப்பாவில் ஆரம்பமாகியது.
இதில் விநோதம் என்னவெனில் மக்களிடையே எந்தவித அறிமுகமும் அல்லாதவர்களை இனம் கண்டு, தம்முடன் ஒத்துழைக்கக் கூடியவர்களை பிரதேசவாத அடிப்படையில் பொறுப்புக்களில் அமர்த்தியது மட்டுமல்லாது, மிக நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பங்களித்தவர்கள் யாவரும் ஒதுக்கி மானபங்கப் படுத்தப் பட்டார்கள்.
அவ்வேளையில் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஒன்றும் இல்லாத காரணத்தினால் இத் திட்டமிட்ட நாசகார வேலைகளில் ஈடுபட்டவர்கள் யாவரும் இலகுவாக
‘நாடு| என்ற சொற்பதத்தைப் பாவித்து, தாம் நாட்டிற்கும் தலைமைக்கும் விசுவசமானவர்கள் போல் நடித்து, முழு புலம்பெயர்வாழ் மக்களை மடையர்கள் ஆக்கினார்கள்.
நாடு, கீழை
இவர்களுடன் என்ன பிரச்சனையை யார் கதைத்தாலும,; இவர்களுக்கு தெரிந்த சொற்கள் ‘நாடு, கீழை’ 'உங்களுக்கு உள்ள வேலையை நீங்கள் பாருங்கள்" இத்துடன் யாரோ சொன்னதாக ‘அவர் விரும்புவது, ஓடின குதிரை அல்ல ஓடும் குதிரையே’ எனக் கூறி சகலரும் ஒதுக்கப்பட்டு ஒரு புதிய அத்தியாயம் ஐரோப்பாவில் பிறந்தது.
இவர்களின் விசேட தன்மை என்னவெனில், தாம் சொல்வது நினைப்பது, நடைமுறைப் படுத்துவது யாவும் நீதி நியாயத்துடனானது. மற்றையவர்கள் செய்வது யாவும் நேர்மையற்றது, ஒழுங்கற்றது என இவர்கள் திடமாக எண்ணுகிறார்கள்.
‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்’ என்பது போல் அநியாயம் தலைதூக்கி நாடகம் ஆடிய காரணத்தினால், சில வருடங்களிலேயே உண்மை எது, பொய் எதுவென அறிய வேண்டியவர்கள் அறிந்தார்கள். நடவடிக்கையும் எடுத்தார்கள். இதன் பலனாக ஐரோப்பாவில் கடவுச் சீட்டு இல்லை, வதிவிட பத்திரம் இல்லை என சாட்டு போக்கு கூறிவர்கள் யாவருக்கும் கடவுச் சீட்டும் வதிவிட பத்திரமும் 24 மணிநேரத்தில் கிடைத்து, 48 மணி நேரத்தில் ‘தனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழைத்தால் போதும்’ என, வேலிக்கு ஓணான் சாட்சி போல் யாவரும் அடுத்தடுத்து களம் இறங்கினார்ள்.
ஆனால் அங்கு ஏதுவும் பலிக்காத நிலையில், இவர்கள் யாவரையும் ஒட்டு மொத்தமாக நிர்மூலமாக்க வேண்டுமென சபதம் கொண்டு தமது நீண்டகாலக் கனவை நனவாக்க ஆரம்பித்தார்கள்.
நாசகார சக்திகள்
இதனால் ஐரோப்பாவில் பல இடங்களில் இவர்களது தகவலாளார்கள் தொடர்பாளர்கள், நண்பர்கள் உட்பட பலர் மாமியார் வீடுகளுக்கு செல்ல நேர்ந்தது.
ஆனால் நாசகார சக்திகள் தொடர்ந்த தமது வேலைத்திட்டங்களில் கண்ணும் கருத்துமாக செயற்பட்ட காரணத்தினால் யாவும் இவர்கள் நினைத்தது போல் இன்று நிர்மூலமாக்கப்பட்டது.
தலைமைத்துவம், பொறுப்புக்கள் யாவும் தம்மிடையே வந்துவிட்டதாக எண்ணி கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் நடத்தியவர்கள் வாழ்வில் திருப்தியே ஏற்படாத காரணத்தினால் தமது 1997க் குழுவுடன் மீண்டும் கோதாவில் இறங்கினார்கள்.
காரியாலயங்களில் தகவலறிய ஒரு குழு, கடைத் தெருவோரங்களில் ஒட்டுக் கேட்க இன்னுமொரு குழு, சர்வதேச வேலைகளை நாசமாக்க ஒரு குழு, இணையத்தளங்களில் பலரை இழிவுபடுத்த ஒரு குழு, தமிழ் மக்களிடையே ஒற்றுமை நிலையாது கண்காணிப்பதற்கு ஒரு குழு, தாம் தட்டி சுத்திய பணத்தில் வியாபாரம் நடத்தவென ஒரு குழு, யாரும் உண்மை பேசினால் அவர்களுக்கு அடி போடவென ஒரு குழுவென யாவும் ஒரே குழு ஆட்சியாக இயங்குவதை நாம் நடைமுறையில் இன்று ஐரோப்பாவில் காணக்கூடியதாக உள்ளது.
இப்படியான மனோபக்குவம் உள்ள தனிப்பட்ட கோடாரி கம்புகள் இருக்கும்வரை ஈழத்தமிழர் அல்ல உலகில் எந்த இனமும் ஒற்றுமையாக வாழமுடியாது, வாழவும் விடமாட்டார்கள்.
தமது முக்கியத்துவம், தம்மை நாலுபேர் மதிப்பது இல்லாது போய்விடும் என்பதுதான் இவர்களது கவலை, வாழ்க்கை.
ஆகையால் இவர்களை போன்றோர் நேர்மையாக வியர்வைசிந்தி, ஊதியம் பெறும் வேலைபார்க்கும் வரை, தமிழர்களின் தலைமைத்துவத்தை இவர்கள் தமது கையில் பெறும்வரை, ஒற்றுமை ஒருபோதும் நிலவ மாட்டாது. காரியாலயங்கள் இணைய தளம், சஞ்சிகைகள், கடைகள், கோயில்கள், சங்கங்கங்கள் ஆகியவற்றுக்கும் இதே கதிதான்.
வாழ்க இவர்கள் பணிகள், தொடர்ந்து ஏமாறுவது தமிழினம்.
ச.வி. கிருபாகரன் - பிரான்ஸ்
நன்றி: ஈழமுரசு (05.07.2011)


No comments:
Post a Comment