ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது அதனை பேரவையிலிருந்து நீக்கிவிடும் பகீரத முயற்சியில் இலங்கை தூதுக்குழுவினர் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.அந்த வகையில் ஜெனீவா செல்லவுள்ள இலங்கை தூதுக்குழுவினர் பொதுக் கூட்டங்கள், தனிப்பட்ட சந்திப்புக்கள், இருதரப்பு சந்திப்புக்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் உப நிகழ்வுகள் என்பனவற்றின் ஊடாக மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பிரேரணையை நீக்குவது குறித்து பாரிய முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளனர்.
அந்த வகையில் தற்போது ஜப்பான் சென்றுள்ள மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவரான மஹிந்த சமரசிங்க இன்று சனிக்கிழமை ஜெனீவா விரையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக இலங்கை வந்து இங்கிருந்து ஜெனீவா செல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது ஜப்பானிலிருந்து நேரடியாக ஜெனீவா செல்லவுள்ள அமைச்சர் சமரசிங்க மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், பிரேரணை மீதான வாக்கெடுப்பும் அவசியமில்லை என்று வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக் கப்படுகின்றது.
மேலும் சில தினங்களில் இலங்கையிலிருந்து செல்லவுள்ள இலங்கை தூதுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் இணைந்து இலங்கையின் நிலைப்பாட்டை உறுப்பு நாடுகளுக்கு விளக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.
அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணைக்கு ஏற்கனவே சில நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இலங்கை தூதுக்குழுவினர் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய அம்சங்களில் திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என சில நாடுகள் கோரியுள்ளதாகவும் எனவே அந்த நாடுகளுடன் பேச்சு நடத்தி ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை தூதுக்குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரின் அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் 20 ஆம் திகதிக்கு முன்னர் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியிலேயே அமெரிக்காவின் பிரேரணையை வாக்கெடுப்புக்கு உட்படுத்தாமல் அதனை பேரவையிலிருந்து நீக்கிவிடுவதற்கான முயற்சியில் இலங்கை தூதுக்குழுவினர் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை இவையத்துக்கும் அப்பால் அமெரிக்காவின் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதனை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதாகவும் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய விடயங்களையும் நீக்கிவிட்டு புதிய அம்சம் ஒன்றை உள்ளடக்குவது குறித்து ஆராயய தயாராக இருப்பதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment