
ஐ.நா மனித உரிமைச் சபையிக் கூட்டத் தொடரின் இரண்டாவது வார அமர்வின் தொடக்க நாளான இன்று திங்கட்கிழமை, சிறிலங்கா தொடர்பில் இரண்டு உரைகள் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளதென, கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காப் பிரதிநிதியின் உரையும், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் உரையும், சிறிலங்கா தொடர்பிலான அவர்களது இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி நின்றதாக தெரிவித்துள்ளனர்.
காலை அமர்வின் போதுஎ சிரியா, வட கொரியா மற்றும் ஈரான் குறித்து கருத்துரைத்த அமெரிக்கப் பிரதிநிதி, சிறிலங்கா தொடர்பில் குறிப்பிடுகையில்…
சிறிலங்கா அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது, தனது பரிந்துரைகளில் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொறுப்புக் கூற தவறியுள்ளதென குற்றஞ்சாட்டினார்.
சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை வரவேற்பதாக குறிப்பிட்ட அமெரிக்க பிரதிநிதி, பரிந்துரைகளை செயற்படுத்தும் முறை குறித்தான பொறிமுறைகளை காணவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த சிறிலங்காவுடன் இணைந்து செயற்படத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கப் பிரதிநிதி தெரிவித்தார்.
தொடர்ந்து மாலை அமர்வின் போது, பல அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தன.
இதில், சர்வதேச மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் இன்றைய உரை முற்றுமுழுதாக, சிறிலங்கா தொடர்பிலேயே இருந்துள்ளது.
சிறிலங்கா தொடர்பில், சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தினை தொடர்சியாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து வந்துள்ள நிiலில், இன்றைய சபையமர்விலும் இதனையே அழுத்தம் திருத்தாக, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.
சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தி வருவதாகவும், சிறிலங்கா மீது சர்வதேச விசாரணை, பிரேரணை தேவையில்லை என சிறிலங்காவின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ.நா கூட்டத் தொடரின் தொடக்க நாளில் உரையாற்றியதை நினைவூட்டிய மனிதஉரிமைகள் கண்காணிகம், மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக் கூறுவதை விடுத்து, சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கி, காலத்தை கடத்தி வருகிறதென தெரிவித்தார்.
விசாரணையினை வலியுறுத்தும் ஐநா செயலாளர், சர்வதேச நிறுவனங்கள், மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் ஊடகங்கள் என்பவற்றின் கோரிக்கைகளை சிறிலங்கா புறந்தள்ளி வருவதாகவும் தெரிவித்தார்.
மனித உரிமை விடயங்களுக்கு மத்தியில், பல சமூகத்தினர் இலங்கையில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் தெரிவித்திருந்ததோடு, மனித உரிமைகள் நாள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இரு அரசியல் செயற்பாட்டாளர்கள் டிசம்பம் மாதம் கடத்தப்பட்டமை குறித்தும் இடித்துரைத்தார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்து, அனைத்து தரப்பினருக்கும் பொறுப்புக் கூறும் வகையில், சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என மனித உரிமைகள் கண்காணிப்பக பிரதிநிதி தெரிவித்தார்.
இதேவேளை சிறிலங்கா தொடர்பில் The international Foundation for the protection of Human rights defenders எனும் அமைப்பினால் ஐ.நா மனித உரிமைச் சபையில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் 2011ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment