இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஒரு ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்க, மற்றொரு ட்ராக்கில் சர்ச்சைக்குரிய கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
“எதிர்காலத்தில் இலங்கை பிரமுகர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதை மத்திய அரசு ஊக்குவிக்காமல் இருந்தால், பாராட்டுக்குரியதாக இருக்கும்” என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதம், ராஜதந்திர வட்டங்களில் முறுகலை ஏற்படுத்தக்கூடியது. இலங்கை அரசு இந்தக் கடிதத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதை ஜெயலலிதா அறியாமல் இருப்பாரா என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கையில் இருந்து அரசியல் பிரமுகர்கள் தமிழகம் வரும்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் சமீபகாலமாக நடைபெறுவது அதிகமாகியுள்ளது. சமீபத்தில் இலங்கை ஜனாதிபதியின் உறவினர் திருக்குமரன் நடேசன் ராமேஸ்வரம் வந்தபோது அவரைத் தாக்க முயற்சி நடந்தது. இதுபோல இதற்கு முன்னரும் வேறு இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வந்தபோது தாக்க முயற்சிகள் நடைபெற்றிருந்தன.
தமிழகத்தில் உணர்ச்சிகள் எப்படியிருந்தாலும், உலக அளவில் தமிழகத்தின், மற்றும் இந்தியாவின் இமேஜைக் குறைக்கும் சந்தர்ப்பங்களாகவே அவை அமைந்திருந்தன. இன்டநேஷனல் பாலிடிகல் ரெபுடேஷன் உடைய மீடியாக்கள் இந்தச் சம்பவங்களை இந்தியா தொடர்பான லேசான கிண்டலுடன் விமர்சித்திருந்தன.
அதைவிட, ராஜதந்திர வட்டங்களில் இவை இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவங்களாக அமைந்திருந்ததை, லோக்கல் நியூசில் யாரும் கவர் பண்ண மாட்டார்கள். இதன் முக்கியத்துவம் பற்றியும் யாரும் வாய் திறந்ததில்லை.
இப்படியான தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு, Diplomatic immunity என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஒரு மாநிலத்தின் முதல்வருக்கும் அது என்னவென்று தெரியாதது ஆச்சரியமானது.
ஒரு நாட்டின் பிரமுகர்கள், மற்றைய நாட்டுக்கு, அது கொள்கை ரீதியாக எதிரி நாடாக இருந்தாலும், தங்கு தடையின்றி செல்வதற்கு சர்வதேச சட்டம் (international law) வழிவகுக்கிறது. ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 1961-ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து (இந்தியா உட்பட) ஏற்றுக்கொண்ட சர்வதேச ராஜதந்திர கொள்கை அது. Vienna Convention on Diplomatic Relations (1961) என்று இதைச் சொல்வார்கள்.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையொப்பம் இட்டிருக்கிறது.
வியன்னா கன்வென்ஷன் ப்ரொடெக்ஷன் இல்லாவிட்டால், இஸ்லாமபாத்திலும், கராச்சியிலும் இன்னும் சில நகரங்களிலும் உள்ள இந்திய தூதரகங்கள் தூள்தூளாகியிருக்கும். இந்திய ராஜதந்திரிகள் கையில் மாவுக் கட்டுடன்தான், டில்லி திரும்பியிருப்பார்கள்.
இதில் ராஜதந்திரிகள் என்று குறிப்பது யாரை? அவர்களை எப்படி அடையாளம் காண்பது? மிகச் சுலபம். எந்தவொரு நபர், நாட்டுக்குள் வரும்போது டிப்ளமட்டிக் பாஸ்போர்ட்டில் பயணம் செய்கிறாரோ, அவர் ராஜதந்திரி.
பிரதமர், அமைச்சர்கள், உயரதிகாரிகள் மட்டுமே டிப்ளமட்டிக் பாஸ்போர்ட்டில் பயணம் செய்வதில்லை. எதிர்க்கட்சி தலைவர்களும் அதே பாஸ்போர்ட்டில் பயணிக்கிறார்கள். நாட்டின் வி.ஐ.பி.கள் பலருக்கும் அதே பாஸ்போர்ட வழங்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கியானி ஜெயில்சிங்கின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, இன்னமும் டிப்ளமட்டிக் பாஸ்போர்ட் உள்ளது.
இந்த நபர் வெளிநாடு செல்லும்போது, அந்த நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கு அறிவித்துவிட்டே செல்கிறார். அங்கே அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அது இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவருக்கு ஏற்பட்ட அசம்பாவிதமாக பார்க்கப்படும். இந்தியாவிடம் அந்த நாடு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும்.
கேட்க நன்றாக இருக்கிறதல்லவா? ஆனால், அதேபோல, மற்றொரு நாட்டின் டிப்ளமட்டிக் பாஸ்போர்ட்டில் இந்தியா வருபவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்தியா மன்னிப்பு கோர வேண்டியிருக்கும். அதுதான் சர்வதேச மரபு.
இப்போது தமிழக முதல்வரின் கடிதத்தை பாருங்கள். “எதிர்காலத்தில் இலங்கை பிரமுகர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதை மத்திய அரசு ஊக்குவிக்காமல் இருந்தால், பாராட்டுக்குரியதாக இருக்கும்” என்று இவர் சும்மா எழுதியிருக்கலாம். ஆனால், இது ஒரு சீரியஸ் விஷயம்.
இலங்கையில் ஹம்பாந்தோட்ட என்று ஒரு இடம் உள்ளது. இங்கு பெரிய துறைமுகம் ஒன்றை அமைத்து வருகிறது சீனா. அதே நகரில் தமது நாட்டு தூதரகம் ஒன்றையும் அவர்கள் நிறுவியுள்ளனர். இந்தத் துறைமுகத்தால் இந்தியாவுக்கு பல விதங்களில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால்தான், இந்தியாவும் அங்கே தமது துணை தூதரகம் ஒன்றை இயக்க விரும்புகிறது.
அந்த ஏரியாவில் இந்தியர்களே இல்லை எனலாம். அப்படியொரு இடத்தில் இந்தியா தூதரகம் அமைக்க விரும்பும் காரணமே, சீனா என்ன செய்கிறது என்பதை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்கே!
இந்த ஹம்பாந்தோட்ட என்ற இடம், இலங்கையின் தெற்கு மாகாணத்தில் (Southern Province) உள்ளது. அதற்கு ஒரு மாகாண முதல்வரும் உள்ளார். அவரின் பெயர் ஷான் விஜயலால் டி சில்வா. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்.
தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியதுபோல, இலங்கையின் தெற்கு மாகாண முதல்வர், இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினால் என்னாகும்?
இந்தியர்களே இல்லாத இடத்தில் இந்தியாவுக்கு ஏன் துணைத் தூதரகம் என்று அவர் அந்தக் கடிதத்தில் கேட்டால் என்னாகும்?
சீனாவில் ஒரு கண் வைத்திருப்பதற்காக, ஹம்பாந்தோட்ட ஏரியாவில் இந்திய டிப்ளமட்டிக் பாஸ்போர்ட்டுடன் உலாவும் நபர்களின் (றோ அதிகாரிகள் உட்பட) எண்ணிக்கை எவ்வளவு என்று தமிழக முதல்வருக்கு மத்திய அரசில் இருந்து யாராவது சொன்னார்களா? அவர்கள் அந்தப் பக்கம் வருவதை இலங்கை அரசு தடுக்க தொடங்கினால் என்னாகும்?
முதல்வர் ஜெயலலிதா தெரிந்தோ, தெரியாமலோ தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதற்கு, ராஜதந்திர பரிபாஷையில் (diplomatic terminology), ஒரு சொற்தொடர் உண்டு. Travel restrictions on diplomatic travel.
உங்களுக்கு Indian Foreign Service (IFS) அதிகாரி யாரையாவது தெரிந்தால், விசாரித்துப் பாருங்கள். இந்த ரிஸ்ட்ரிக்ஷன் எப்போது போடப்படும் என்றால், ஒரு நாட்டுடன் ராஜதந்திர உறவை முறித்துக் கொள்வதற்கு முதல் கட்டம் இதுதான்! அதைத்தான் கோரியிருக்கிறார் முதல்வர்.
இங்குள்ள மற்றொரு முக்கிய விஷயம். இப்படியொரு கடிதம் எழுதப்பட்ட விஷயத்தை இலங்கை அரசு தூக்கிப் பிடித்து, அதை பெரிய விஷயமாக்கினால் (செய்ய சான்ஸ் இருக்கிறது), என்னாகும்? அதையும் யாராவது, IFS அதிகாரியிடம் விசாரித்துப் பாருங்கள்.
பொதுவாக இப்படியான விஷயங்களை அமுக்க, மற்றைய நாட்டின் ஏதாவது கோரிக்கையை சம்மந்தப்பட்ட நாடு நிறைவேற்றி விடுவது வழக்கம்.
ஐ.நா.வில் இந்தியாவின் உதவி தேவை என்ற நிலையில் இலங்கை இருக்கையில், தமிழக முதல்வர் இப்படியொரு கடிதத்தை எழுதிய டைமிங்கை என்னென்று சொல்ல? கொழும்பு இதை வைத்தும் டில்லிக்கு அழுத்தம் கொடுக்குமே!
சர்வதேச ராஜதந்திரத்துக்கும், சங்கரன்கோவில் அரசியலுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
No comments:
Post a Comment