கோழிப் பண்ணை மீது வைத்து உள்ள நம்பிக்கையை சினிமா மீது வையுங்கள் என வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் கமல்ஹாஸன்.
மேலும் பழைய திரைப்படங்களை 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் திரைப்படங்கள் சார்ந்த ஊடகம் மற்றும் தொழில்துறை 2 நாள் மாநாடு நடந்தது.
இதில் சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்சன், முதன்மை அதிகாரி பங்கஜா தாக்கூர், நடிகர் கமலஹாசன், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் முடிவில் கமலஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியா முழுவதும் திரைப்படத் தொழிலில் 'டிஜிட்டல்' முறை உருவாகி வருகிறது. இதனால் பழைய 'ரீல்' முறையை மாற்றி, நவீன யுக்திகளுடன் சினிமா எடுக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் 3,500 பழைய படங்களை அரசாங்க உதவிகள் இல்லாமல் 'டிஜிட்டல்' முறையில் பாதுகாத்துள்ளோம். இதேபோல், இந்தியா முழுவதும் உள்ள பழைய படங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
பழைய படங்களை 'டிஜிட்டல்' முறையில் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும்.
`டிஜிட்டல்' மாற்றத்திற்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட சந்தேகங்களைக் களைய இந்த மாநாட்டின் மூலம் விளக்கம் தரப்பட்டது.
இந்த மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில் சென்சார் போர்டு அதிகாரிகள் வந்து தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். தயாரிப்பாளர்களின் சந்தேகங்களுக்கு அவர்கள் இன்முகத்துடன் பதில் அளித்தனர். இந்த மாநாட்டின் மூலம் தயாரிப்பாளர்கள், சென்சார் போர்டு அதிகாரிகள் இடையே சுமுகமான உறவு ஏற்பட்டது.
திரைப்படங்களில் சென்சார் போர்டு புதிய செயல்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல்பாடுகள் பற்றி தயாரிப்பாளர்கள், திரைப்படத்துறையினருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கி கடன் வேண்டும்
திரைப்பட தொழிலுக்கு வங்கிகளில் கடனுதவி வழங்குவது தொடர்பாக பேசி வருகிறோம். கோழிப் பண்ணை மீது வைத்து உள்ள நம்பிக்கையை சினிமா தொழில் மீது வங்கிகள் வைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். வங்கிகள் மூலம் கடனுதவி பெறும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். திரைப்படங்கள் பட்ஜெட்டை பொறுத்து வசூல் ஆகும்.
இந்த 2 நாள் மாநாட்டில் திரைப்படத்துறைக்கு தேவையான நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் மூலம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மாற்றத்தை கொண்டு வந்த இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்புக்கு (`பிக்கி') நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
No comments:
Post a Comment