தமிழீழ தேசியக்கொடியினை மாவீரன் லெப்டினட்கேணல் இம்றான் அவர்களின் சகோதரர் திரு. வல்லவசீலன் அவர்கள் ஏற்றிவைத்தார். யேர்மன் தேசியக்கொடியினை தமிழகத்திலிருந்து வருகைதந்த உணர்வாளர் அருட்தந்தை அரிமாவளவன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக அறிக்கை தமிழரின் தேசிய வானொலியான புலிகளின் குரல் வானொலி ஊடாக நேரடியாக ஒலிபரப்பாகியது.
அடுத்து அகவணக்கத்துடன் துயிலுமில்ல பாடல் இசைக்க மாவீரன் கரும்புலி மேயர் மிதுபாலன் அவர்களின் சகோதரி திருமதி கலாயோதி இராயேந்திரன் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினர் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக மாவீரத் தெய்வங்களுக்கு மலர்தூவி தீபமேற்றினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வு ஆரம்பமாகியது. ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை உறுதிதளராமல் விடுதலையின் பக்கம் செயற்பட்டுவருபவருமான வானதி நர்த்தனாலய ஆசிரியை கலாநிதி திருமதி வானதி தேசிங்குராஜா அவர்களின் நெறியாள்கையில் வானதி நர்த்தனாலய மாணவிகள் விடுதலைப்பாடல்களுக்கு நடனமாடினர்.
தொடர்ந்து தமிழீழத்தில் உருவாகி புலம்பெயர் தேசத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் தமிழீழம் இசைக்குழுவினரின் விடுதலை கானங்கள் இசைக்கப்பட்டது. அடுத்து தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த அருட்தந்தை அரிமாவளவன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.
அவர் தனது உரையில் மாவீரர்களின் கனவுகளை நனவாக்க பிரிவினைகளை மறந்து எல்லோரும் ஒன்றுபட்டு கடமைகளையும் பொறுப்புக்களையும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தமிழீழ வெளியீட்டுப் பிரிவினரால் இலட்சியம் வெல்வோம் என்னும் இறுவட்டு வெளியிடப்பட்டது. அதனை அருட்தந்தை அரிமாவளவன் அவர்கள் வெளியிட்டுவைத்தார்.
தொடர் நிகழ்வாக நாடுகடந்த தமிழீழ அரசின் துணை நிதிஅமைச்சர் திரு. இராயேந்திரா அவர்களின் உரையும் இடம்பெற்றது. தமிழகத்திலிருந்து தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் தோழர் மு.களஞசியம் அவர்களின் ஆக்கத்தில்” நிட்சயம் உருவாகும் பிரபாகர பிரபஞ்சம்” என்னும் கவிதை நிகழ்வு இடம்பெற்றது.
எழுச்சி நடனம் எழுச்சி கானங்கள் இடம்பெற்றது. இறுதியாக தமிழீழத் தேசியக் கொடியும் யேர்மனியத் தேசியக் கொடியும் இறக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழம் இசைக்குழவினர் மக்களுடன் இணைந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்க நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
No comments:
Post a Comment