ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி பெரிய குளத்தின் அருகே புதருக்குள் இன்று காலை பெண் பிணம் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ஆரல் வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லெட்சுமி, டி.எஸ்.பி. பாஸ் கரன், இன்ஸ்பெக்டர் வேலு மணி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு முட்புதருக்குள் அலங்கோலமான நிலையில் பெண் பிணம் கவிழ்ந்த நிலையில் கிடந்தது. போலீசார் உடலை திருப்பி பார்த்த போது முகத்தில் ரத்தக் காயங்கள் இருந்தன. சுமார் 32 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உதடு, காது, தலை உள்பட பல இடங்களில் ரத்தக் காயங்கள் காணப்பட்டன.
பிணத்தின் அருகே துண்டு ஒன்றும், 2 பைகளும் கிடந்தது. ஒரு பையில் கிழங்கு, காய்கறி, பூ, மெழுகுவர்த்தி, மீன் போன்றவை இருந்தது. இன்னொரு பையில் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் மற்றும் மேக்கப் சாதனங்கள், சோப்பு ஆகியவை இருந்தது.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது பீமநேரி ரோட்டில் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. பிணமாக கிடந்த பெண் யார்? என தெரியவில்லை. ஏதேனும் மர்மகும்பல் பெண்ணை கடத்தி வந்து தாக்கியும், துண்டால் கழுத்தை நெரித்தும் கொலை செய்து முட் புதருக்குள் உடலை வீசிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேரோட்டில் நடந்து சென்ற அரசு ஊழியரை வழி மறித்து தாக்கிய மர்மகும்பல் அவரிடமிருந்து நகை, பணத்தை பறித்து சென்றனர். இந்தநிலையில் அதே ரோட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



No comments:
Post a Comment