நேற்று முன்தினம் இரவு யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் 7 வர்த்தக நிலையங்களில் தொடர் திருட்டு இடம்பெற்றிருந்தது.
இத் திருட்டுச் சம்பவத்துடன் அதிர்ந்துபோன அப் பகுதி வர்த்தகர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
ஏனெனில் இப்படியானதொரு துணிகரமானதும், தொடரான திருட்டுக்களும் இப் பகுதிகளில் மட்டுமன்றி யாழ்ப்பாணப் பகுதிகளிலேயே நடந்தது இல்லை என்கின்றனர் வர்த்தகர்கள்.
இதனால் தங்களது வர்த்தக நடவடிக்கைகள், தங்களின் வாழ்வாதாரம் என்பன கேள்விக் குறியாகி விட்டதுடன், எதிர்கால வர்த்தக நடவடிக்கைகளும் பாழாகி விட்டதென்ற ஏக்கம் அவர்களைச் சூழ்ந்திருக்கின்றது.
இந் நிலையில்தான் இன்றைய தினம் அப் பகுதியில் உள்ள வர்த்தகர்களுடனான சந்திப்பை இராணுவமும், காவல்துறையினரும் நடத்தினர்.
இச் சந்திப்பில், வர்த்தகர்களின் எதிர்கால பாதுகாப்புத் தொடர்பில் அதீத கவனம் செலுத்துவது போல் பாசாங்கு செய்தது இராணுவமும்,காவல்துறையனருமே.
ஆடு நனைகின்றது என ஓநாய் அழுத கதைபோல் இருந்தது இவர்களின் செயற்பாடு என இச் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
அதாவது உங்களின் வர்த்தக நிலையங்களைப் பாதுகாக்கத் தாங்கள் தயாராகவுள்ளோம் எனவும், ஆதலால் இப் பகுதியில் ஒரு இராணுவக் காவலரண் ஒன்றை நிறுவி உங்களின் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றோம் எனவும் இச் சந்திப்பில் இராணுவத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தும் இச் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தகர்கள், தங்களின் வர்த்தக நிலையங்களுக்கு தங்கள் செலவில் காவலாளிகளை நியமிப்பது எனவும் எங்கள் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்கின்றோம் என்றும், அவ்வாறு உறுதிப்படுத்த முடியாதுபோகும் பட்சத்தில் உங்களின் உதவியை நாடுகின்றோம் என்றும் பதிலளிக்கப்பட்டது.
மேற்படி பதிலை எதிர்பாராத இராணுவமும் காவல்துறையிரும் இலவுகாத்த கிளிபோல் ஏமார்ந்து போய் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்துத் தரும்படியும் வர்த்தகர்களால் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து, நடைபெற்ற இத் திருட்டும், நடாத்தப்பட்ட இச் சந்திப்பிலும் ஒரு உள்நோக்கம் இருக்கின்றது என்பது நன்றாகவே புலப்படுகின்றது.
அத்துடன்; திருடப்பட்ட வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நாளாந்தம் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த காவல்துறையினரும், இராணுவமும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற நாளன்று ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உள்நோக்கங்கள் கொண்ட செயற்பாடுகளால் தமிழ் மக்கள் பாரியளவில் பாதிப்படைவதுடன், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது என்ற பெயரில் காவலரண்களை அமைத்துப் போர்ச் சூழலை உருவாக்க முயற்சிக்கின்றது இராணுவம்.
இந்த இராணுவ முகாம்களை அமைப்பதற்காக வர்த்தகர்களையும் அவர்களின் வர்த்தக நிலையங்களையும் கொள்ளை என்ற பெயரில் பயன்படுத்தி வருகின்றது இராணுவம் என்பது இதிலிருந்து புலப்படுகின்றது என இச் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தகர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment