சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா முதுகெலும்பில் மீண்டும் சத்திரசிகிச்சை செய்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் ரியாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா (87) கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். எனவே, கடந்த ஆண்டு இவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதுகெலும்பில் 2 சத்திரசிகிச்சைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து குணமடைந்த அவருக்கு முதுகில் மீண்டும் வலி ஏற்பட்டது.
எனவே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகெலும்பில் மீண்டும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை கூறினார்கள். ஆகவே அவர் ரியாத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது முதுகெலும்பில் உள்ள 3 வது எலும்புப் பகுதியில் சத்திர சிகிச்சை நடைபெற உள்ளது.
சவூதி மன்னரின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில் அவரைத் தொடர்ந்து ஆட்சியாளராக வருபவர் குறித்து சிக்கல் நிலவிவருகிறது. மன்னர் அப்துல்லாவுக்கு அடுத்து முடிக்குரிய இளவரசராக உள்ள மன்னர் சுல்தான் தனது 80 ஆவது வயதைத் தாண்டியுள்ளார். அவரும் கடந்த ஜுன் மாதம் முதல் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ளார். இதனைத் தொடர்ந்து முடிக்குரியவராக எதிர்பார்க்கப்படும் இளவரசர் நையாப் கடந்த 1975ம் ஆண்டு தொடக்கம் அந்நாட்டின் உள்விவகார அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவரும் தனது 80 வயதை அண்மித்துள்ளார்.
இவர் ஏனையோரை விடவும் முற்போக்கு சிந்தனையுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment