தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தொடர்பில் கொண்டுள்ள மூட நம்பிக்கைகள் மனித உயிர்களைப் பறிகொடுப்பதற்கு வழி ஏற்படுத்துகின்றது.
காலாதிகாலமாக நமது தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் சூட்டும் பெயரைத் தவிர்த்து சமூகத்தால் சூட்டப்படும் பெயர்களால் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர் பெண்கள்.
அதாவது விதவை, மலடு எனப் பெயர்கள் சூட்டி அவர்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது தமிழ்ச் சமூகம்.
இவ்வாறு சமூகத்தால் மலடு எனப் பெயர் சூட்டப்பட்டு மன உலைச்சலுக்கு ஆளாகிய பெண் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று திருகோணமலை குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,
நிலாவெளி இக்பால்நகர், ஜெய்க்கா வீட்டுத் திட்டத்தில் இல.125 இல் வசித்து வரும் எஸ்.தயாழினி (வயது-26) என்ற பெண் திருமணமாகிய நாள் முதல் (2011.02.07) தனக்குக் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை என்ற மன உலைச்சலில் இருந்துள்ளார்.
இந் நிலை தொடர்ந்த நிலையில் நேற்று தனது கணவரின் அக்காவுக்குக் குழந்தை கிடைத்து விட, அதனைச் சென்று பார்வையிட்டு வந்த நிலையிலேயே தனது உயிரை மாய்த்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் ஒரே தினத்தில் திருமணம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இது தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவிக்கையில்,
குழந்தை கிடைத்த தனது அக்காவின் வீட்டுக்குச் சென்று திரும்பி, இரவுச் சமையலை மேற்கொண்டிருந்த வேளையிலேயே தனது உடலில் தீயை மூட்டித் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவித்தார்.
சடலத்தைத் திருகோணமலை பொது வைத்தியசாலைப் பிரதிச் சட்ட வைத்திய அதிகாரி பேனாட் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.
இம் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே இதுபோன்ற உயிரிழப்புக்கள் இனிவரும் காலங்களில் ஏற்படாது தடுக்க தமிழ்ச் சமூகம் முன்வர வேண்டும். தங்களின் அறியாமையைக் காரணம் காட்டி அநியாயமான மனித உயிர்களைப் பறிகொடுக்க எச் சந்தர்ப்பத்திலும் தமிழ்ச் சமூகம் காரணமாகக் கூடாது.
குழந்தை கிடைப்பதும், கிடைக்காது விடுவதும், பெண்ணின் கணவர் உயிரிழப்பதும், உயிரிழக்காமல் இருப்பதும் எந்த மனித சக்தியாலும் செய்ய முடியாத ஒன்று. அது இயற்கை.
எனவே இதுபோன்ற பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை அகற்றி அவர்களை சமூகத்தில் நல்லதொரு இடத்தில் நிறுத்தி அவர்களுக்கு மதிப்பளிப்பதென்பது மனித இனத்தின் மகத்தான சேவைகளில் ஒன்று.
இது இவ்வாறிருக்க தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் பாலியல் நுகர்பொருளாகப் பார்க்கப்படுகின்றமை மன வேதனையை அளிக்கின்றது.
இதனால் பலதரப்பட்ட கலாசாரப் பிறழ்வுகள் உருவாக்கம் பெற்று தமிழ் மக்களை ஒரு இழிவான நிலைக்குள் தள்ளும் செயற்பாடாகவே இது அமையப் பெறும்.
எனவே கட்டிக் காப்பாற்ற வேண்டிய கலாசாரங்களைக் கைவிட்டு விட்டு, எதைக் கைவிட வேண்டுமோ அதனைக் கட்டிக்காத்து வருகின்ற மன நிலையைத் தமிழ்ச் சமூகம் மாற்றியமைப்பதால் விலை மதிக்க முடியாத மனித உயிர்களை இயன்றவரைத் தடுக்க முடியும்.
No comments:
Post a Comment