சோமாலியாவின் அல் ஷபாய் ஆயுதக் குழுவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அயல் நாடான கென்யா முன்னெடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான கென்ய துருப்புகள் எல்லை தாண்டி சோமாலியாவுக்குள் நுழைந்துள்ளன.
அல் ஷபாப் ஆயுதக் குழு கென்ய எல்லையில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ள நிலையிலேயே அந்நாட்டு இராணுவம் இந்த இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. ஆயுதம் தரித்த கென்ய இராணுவ வீரர்களை தாங்கிய 25 வாகனங்கள் சோமாலியாவின் தோப்லி நகரை தாண்டியதாக அங்கிருப்போர் பி. பி. சி. க்கு தெரிவித்துள்ளனர்.
கென்ய இராணுவம் சோமாலியாவுக்குள் நுழைந்துள்ளதை அந்நாட்டு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும் கென்ய இராணுவம் சோமாலியாவுக்குள் நுழைந்தது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என சோமாலியாவுக்கான ஐ. நா. தூதுவர் ஓமர் ஜமால் தெரிவித்துள்ளார். அத்துடன் இது ஒரு நாட்டின் இறையாண்மையை மீறும் செயலாகும் எனவும் அவர் கூறினார்.
இதனிடையே தென் சோமாலியாவில் உள்ள இரு அல் ஷபாப் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சோமாலிய இராணுவத்தின் சிரேஷ்ட கட்டளை தளபதி அப்தி யூசுப் ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
“அல் ஷபாப் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியது யார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் அல் ஷபாவை வெளியேற்றுவதற்கு எமது அயல் நாடான கென்யா எமக்கு இராணுவ உதவிகளைச் செய்யும்” என அவர் கூறினார். இதேவேளை, கென்ய இராணுவம் எல்லை விதிகளை மீறி செயற்படுவதாக அல் ஷபாப் அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஷெய்க் ஹஸ்ஸன் குறிப்பிட்டுள்ளார். கென்ய இராணுவம் எமது புனித பூமிக்குள் அத்து மீறி நுழைந்துள்ளது. இறைவன் உதவியால் அவர்கள் அதிருப்தியுடனேயே திரும்புவார்கள் என கூறினார்.
அல் கொய்தா அமைப்பின் பின்னணியை கொண்ட அல் ஷபாப் ஆயுதக் குழு சோமாலியாவின் ஒரு சில பகுதியை தமது கட்டுப்பாட்டுள் வைத்துள்ளது. இந்த அமைப்பு அண்மைக்காலமாக கென்ய எல்லைக்குள் புகுந்து பல வெளிநாட்டவரை கடத்தி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை கென்யாவில் உள்ள உலகின் மிகப் பெரிய அகதி முகாமான டெடாபெஸ் முகாமில் இருந்த இரு ஸ்பெயின் தன்னார்வ தொண்டர்களை கடத்தியது. அதேபோன்று கடந்த மாதம் இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த அமைப்பு கடத்திச் சென்றது. இதனால் கென்ய சுற்றுலா துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment