யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா முன்னர் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட பூங்காவின் எச்சங்கள் அழிக்கப்பட்டு உன்னி கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.
நிகழ்வினை ஈபிடிபியின் நிர்வாகத்திலுள்ள யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரை நிகழ்த்தும் போது,
தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலப் பகுதி இருண்ட காலமாக விளங்கியதாகவும், தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்களை தவறாக வழிநடத்தியதாகவும் உரை நிகழ்த்தினார்.
அதன் பின்னர் பாடகர் உன்னி கிருஸ்ணனுக்கு நினைவுப் பரிசிலும் வழங்கியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இதேபோன்று இந்தியத் துணைத் தூதரகம், யாழ்.மாநகர சபை ஏற்பாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கொள்வார் என்று நிகழ்வு ஒன்றிற்கான அறிவிப்பினை யாழ்.மாநகர சபை அறிவித்திருந்தது.
இருந்த போதிலும் தமிழக மக்களின் உணர்வினையும் ஈழத்தமிழ் மக்களின் உணர்வினையும் மதித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தார்.
நல்லூர் ஆலய நிகழ்வினைக் காரணம் காட்டி இந்தியத் துணைத் தூதரகமும் ஈபிடிபியும் இணைந்து பாடகர் உண்ணிகிருஸ்ணனை யாழ்ப்பாணம் அழைத்து அவருக்கு அமைச்சர் டக்ளஸ் மூலம் நினைவுப்பரிசில் வழங்கியமை யாழ்.மக்கள் மத்தியில் கவலையையும் ஆத்தரத்தையும் தோற்றுவித்திருக்கின்றது.
தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பலவற்றிற்கு பின்னணிக்குரல் வழங்கிய உன்னி கிருஸ்ணன் திட்டமிட்டே ஈபிடிபி நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருப்பதாக யாழ்.மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment