சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் பாராட்டுப் பெற்றிருக்கிறார் ஒரு தமிழ் நடிகர் கம் நடன இயக்குநர்.
அவர் பெயர் ஜிவி நந்தா. மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தின் நடன இயக்குநர் இவர்தான்.
சாதாரணமாக சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த இந்த இளைஞர், அகில இந்திய அளவில் அறியப்படுகிற நடனக் கலைஞராக வாய்ப்பு கிடைத்துள்ளது.
திறமைசாலியான இந்திய இளைஞர் என இவரை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உதாரணப்படுத்தும் அளவுக்கு சிறப்பு பெற்றவராக மாறியிருக்கிறார் நந்தா.
சிறு வயது முதல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட நந்தா, பதிமூன்று வயது முதல் நடனம் ஆடத் தொடங்கினார். ஜான் பிரிட்டோ நடன குழுவில் சேர்ந்து ஆடினார்.
குழுவில் தலைமை நடனக் கலைஞராக உயர்ந்த இவரது தனித்துவத்தை அமெரிக்க தூதரகம் அங்கீகரித்தது. மேற்கத்திய நடனத்தை விரிவாகக் கற்க வாய்ப்பளித்தது.
அமெரிக்காவின் கலாச்சார பரிவர்த்தனைகளில் வெளிநாட்டு திறமைசலிகளுக்கு அமெரிக்க கலைகளைக் கற்றுக் கொள்ள இடம் அளிக்கும் திட்டம் உள்ளது. அதன்படி இந்திய அளவில் மூவர் மட்டுமே வாய்ப்பு பெற்றனர். டெல்லி,மும்பையிலிருந்து தலா ஒருவர். சென்னையிலிருந்து நந்தா மட்டுமே, அதாவது இந்திய அளவில் தேர்வான முவரில் இவர் ஒருவர்.
பயிற்சி முடிந்து திரும்பிய நந்தா ஜான்பீட்டர் குழுவில் மீண்டும் இணைந்து ஆடி வந்தார் ஏராளமான மேடைநிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவரிடம் விக்ரம் முதல் ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ் போன்ற பல நட்சத்திரங்களும் பயிற்சி பெற்றுள்ளார்கள்.
விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா யார் ? போட்டியில் பங்கு பெற்றார். அப்போதுதான் செல்வராகவன் உதவியாளர் ராஜேஷ்லிங்கம் இயக்கிய 'புகைப்படம்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது .
நந்தாவின் திறமையைக் கேள்விப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, குஜராத் உருவான 50வது ஆண்டுவிழாவில் நடனம் வடிவமைத்துக் தரும்படி கேட்டார். அதன்படி 2000 நடனக் கலைஞர்கள் பங்கேற்க 2 லட்சம் பேர் முன்னிலையில் நடந்த அந்த நடன நிகழ்ச்சியை வடிவமைத்தார். அது மோடிக்குப் பிடித்து விட்டது. இவரை மேடைக்கு அழைத்த முதல்வர் மோடி 'நாட்டின் எதிர்காலம் இப்படிப்பட்ட இளைஞர்கள்தான்' என்ற பாராட்ட பார்வையாளர்கள் கரவொலியால் அதிர வைத்தனர்.
"வாடா போடா நண்பர்கள்' என்ற படத்திலும் நடித்துள்ளார்.
"நான் நடித்த இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் நிறைய கற்றுக் கொடுத்தது," என்கிறார் நந்தா.
'எனக்கு கதாநாயகன்,வில்லன் என்கிற பாகுபாடு இல்லை. நல்ல நடிகன் என்கிற நோக்கத்தில்தான் என் தேர்வு இருக்கும் என்னை வேலை வாங்கும்படியான இயக்குநரிடமே பணிபுரிய விருப்பம்' என்கிறார் ஜி.வி.நந்தா.
No comments:
Post a Comment