திரைப்பட நடிகைகள் மீனா, சுகன்யா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கும் புதிய ரியாலிட்டி ஷோ சன் தொலைக்காட்சியில் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களின் கலைத்திறமையை, தனித்திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது
பிரபலங்களாக உள்ள சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கு தனியான வரவேற்பு உண்டு. விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில்தான் டி.ஆர்.பி ஐ அதிகரிப்பதற்காக அதிக அளவில் சின்னத்திரை நட்சத்திரங்களை பங்கேற்க வைப்பார்கள்.
கலைஞர் டிவியில் மானாட மயிலாட என்ற பெயரில் சின்னத்திரை நட்சத்திரங்களின் நடனம் இடம் பெறுவதைப் போல சன் டிவியில் புதிதாக சூப்பர் குடும்பம் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொடங்கியிருக்கின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கஸ்தூரி, அத்திப்பூக்கள், முந்தானை முடிச்சு, இளவரசி, தென்றல் போன்ற பிரபல சீரியல்களின் நட்சத்திரப்பட்டாளங்கள் களம் இறங்கியுள்ளனர்.
நடனமோ, பாட்டோ, நடிப்போ அவரவர்க்கான தனித்திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிதான் சூப்பர் குடும்பம். இந்த நிகழ்ச்சியில் கலைஞர்களின் திறமைக்கு எற்ப மதிப்பெண்களை மனதார அள்ளி வழங்கும் நடுவர்களாக இசைஅமைப்பாளர் கங்கை அமரன், நடிகைகள் சுகன்யா, மீனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான காயத்ரி ஜெயராம், மமதி சாரி ஆகியோர் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பமே அமர்க்களமாக அமைந்திருந்தது. சூப்பர் குடும்பத்திற்கு ஏற்ற பாடலை பாடி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். நடிக்கவும், நடனமாடவும் மட்டுமே தெரியும் என்று நினைத்திருந்த சுகன்யாவும் கொஞ்சும் குரலில் பாடி அசத்தினார். திருமணம், குழந்தை என்று மீடியாவை விட்டு ஒதுங்கியிருந்த மீனா புத்தம் புது மலராய் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரீ கொடுத்துள்ளார். குடும்பப்பாங்கான நிகழ்ச்சி என்பதாலோ என்னவோ நடுவர்கள் மட்டுமல்ல தொகுப்பாளர்களும் புடவையில் பாந்தமாய் அழகாய் வந்திருந்தது
நிகழ்ச்சியின் சிறப்பம்சம். நடிக்க மட்டுமே தெரியும் என்று நினைத்திருந்த நடிகர்கள் எல்லாம், நடனம், பாடல், மிமிக்ரி, நடிப்பு என அசத்தி அதற்கேற்க மதிப்பெண்களை ஸ்கோர் செய்தனர். தென்றல் குடும்பத்தினர் 29 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தில் உள்ளனர். முதல் நிகழ்ச்சியில் தனி நடத்தில் அசத்திய பூஜா சிறப்பு பரிசினை தட்டிச்சென்றார்.
சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி கலைஞர்களின் திறமையைப் பொருத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment