எரிபொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் விசேட எரிபொருள் மானியமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தனியார் பஸ் உரிமையாளர்கள், பாடசாலை, வான் உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், கடற்றொழிலாளர்கள், மின்சார வசதி இல்லாத கிராமங்களில் மண்ணெண்ணையை பாவிக்கின்ற சமுர்த்தி உதவி பெறுபவர்கள் ஆகிய ஐந்து பிரி வினருக்கும் இந்த முறை மூலம் மானியம் வழங்கப்படவிருப்பதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல நேற்றுத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இன்று (13ம் திகதி) முதல் முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப்படும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், எரிபொருள் விலை மறுசீரமைப்பு காரணமாகப் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் விசேட எரிபொருள் மானியமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நீண்ட மற்றும் குறுகிய தூரபயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் வண்டிகளின் விபரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நாம் கேட்டுள்ளோம். அவர்கள் அவ்விபரங்களை இன்று 13ம் திகதி எமக்கு வழங்குவதாகக் கூறியுள்ளனர். அந்த விபரம் கிடைக்கப்பெற்றதும் பயணிகள் பஸ் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப பஸ் உரிமை யாளர்களின் வங்கிக் கணக்கு முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப் படும்.
இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர்களின் எரிபொருள் பாவனை தொடர்பாக கவனம் செலுத்தி இந்த எரிபொருள் மானிய முறையை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். இவ்வேலைத்திட்டத்தின்படி தனியார் பஸ் உரிமையாளர்களை மார்ச் மாதம் முதல் மாதாமாதம் எரிபொருள் மானியத்தைப் பணமாகப் பெறுவர். அவர்களது வங்கிக் கணக்கில் இம்மானியப் பணம் வைப்பிலிடப்படும்.
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்ற நாட்கள், அவை சேவையில் ஈடுபட்டிருக்கும் கிலோமீற்றர்கள் என்பவற்றைக் கருத்தில் எடுத்தே இந்த மானியம் மதிப்பிடப்பட்டு வைப்பிலிடப்படும். எரிபொருள் விலையைச் சீரமைப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இதேநேரம், முச்சக்கரவண்டிகளுக்கு 2008ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியதைப் போன்று இம்மானியமுறை நடை முறைப்படுத்தப்படும். மேலும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பதிவுசெய்து பாடசாலை வான் சேவையில் ஈடுபட்டிருக்கும் வான்களின் உரிமையாளர்களுக்கும், மின்வசதியைப் பெற்றிராத மண்ணெண்ணெயைப் பயன்படுத்தும் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் இம்மானியம் வழங்கப்படும். இவர்களுக்கு மானியம் வழங்குவதற்காக சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், மாவட்ட செயலாளர்கள் ஊடாக தகவல்களைத் திரட்டி இம்மானிய முறை செயற்படுத்தப்படும்.
இம்மானிய முறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள ஐந்து பிரிவினரும் மார்ச் மாதம் முதல் மானியக்கொடு ப்பனவைச் சீராகப் பெறுவர்.
என்றாலும், இந்த எரிபொருள் விலை சீரமைப்பு ஊடாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது அடைகின்ற நடத்தை முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment