இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தே ஆகவேண்டுமென இந்த சர்வதேச செயற்பாட்டாளர்கள் கருதினால், 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' அறிக்கையை கருத்திலெடுக்கும் அதே சமயம், எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணயக்; கூட்டத் தொடரின்போது இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவது காலத்தின் தேவையாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும் இதனையே விதந்துரைத்துள்ளது என குறிப்பிட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணயக்; கூட்டத் தொடரின்போது இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற வழிசெய்யும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரம் கொண்டவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கையின் முழுவிபரம்:
இலங்கையில் சர்வதேச சுயாதீன விசாரணை நடைபெற வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீளவும் அழைப்பு விடுக்கின்றது!
நடந்தேறிய யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்ட யுத்த மீறல்களைக் கையாளும் விடயத்தில், சர்வதேசத்தின் பலம் வாய்ந்த அரசாங்கங்களுக்கும் சர்வதேச குடிசார் சமூகத்துக்கும் (சிவில் சமூகம்) இடையில் அடிப்படையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் தான் மேற்கொண்ட யுத்தமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களைத் தானே விசாரணை செய்து நீதி நிலைநாட்டுவதற்கான நேர்மைத்திறனோ அன்றி அதற்குரித்தான தகமையோ அதனிடத்தில்லை என்ற நிலைப்பாட்டை உலகின் மனிதநேய அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு ஆகியன எடுத்துள்ளன.
இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே, இலங்கையின் 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' நடாத்திய விசாரணையில் பங்குபற்றவோ அல்லது சாட்சியமளிக்கவோ இம்மனிதநேய நிறுவனங்கள் முற்றாக மறுத்துவிட்டன.
ஆயினும், விசாரணை ஒன்றை முன்னெடுக்கும்படி சில நாடுகள் இலங்கையை ஊக்கப்படுத்தியும், மெல்லிய வற்புறுத்தலுக்கு உட்படுத்தியும், கடைசியில் இலங்கை தனது குற்றங்களைத் தானே விசாரணை செய்து 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க ஆணைக்குழு' மூலம் அறிக்கையொன்றை வெளியிட வைத்தன.
இவ்விடயத்திலும் மேற்குறிப்பிட்ட முரண்பாடுகள் காணப்படுகின்றன. உலகின் குடிசார் சமுகம் இவ்வறிக்கையை நிராகரித்துள்ள நிலையில் சில அரசாங்கங்கள் மாறுபாடான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. அறிக்கையை சில அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், பரிந்துரைகளை வரவேற்பதாகவும், அதேசமயம் யுத்தத்தின்போது நடந்தேறிய மனிதநேய குற்றச்செயல்கள், யுத்த மீறல்கள் குறித்ததான வகைகூறல் பற்றி அறிக்கையில் குறிப்பிடத் தவறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன. இத்தகைய பின்னணியிலேயே அமெரிக்காவிலிருந்து வெளிவந்த அறிவிப்பை உற்றுநோக்குவது பொருத்தமானதாகும்.
அமெரிக்க அரசாங்கமும், வேறும் சில அரசாங்கங்களும் விடயங்களை நீதியின்பாற்பட்டு பார்க்கத் தவறுவது தமிழர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்நடத்தை பற்றி நாம் ஆச்சரியப் படுவதற்கும் எதுவுமில்லை. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது 40,000ற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு அறிக்கை கூறுகிறது.
மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அவரகளின் கூற்றுப்படி சுமார் 146,0000ற்கும் கூடுதலான மக்கள் பற்றி எவ்வித விபரமும் தெரியாத நிலையும் நிலவுகிறது. யுத்தக் கருவி எதுவாக இருந்தாலும் சரி அவற்றின் மூலம் தமிழர் சமூகத்தை அழித்தொழிக்க மேற்கொண்ட முயற்சி ஒரு யுத்தக் குற்றமே என 'டப்ளின்' மக்கள் நீதி மன்றம் கண்டுள்ளது.
தமிழர் போராட்டம் இவ்வளவு கொடூரமான முறையில் நசுக்கப்பட்டமையைப் பார்த்தால் அரசாங்கத்தின் எண்ணத்தில் 'இனப்படுகொலை' இருந்துள்ளதா என்ற கேள்வியையே மேலோங்கி நிற்கவைக்கிறதாக டப்ளின் மக்கள் நீதி மன்றம் கருதுகிறது. அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் 'கரத் இவான்ஸ்' போன்றோரிடமிருந்து வந்த கடும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சர்வதேச சமூகமும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையானதும் தமிழ் மக்களை நட்டாற்றில் கைவிட்டும் தமது 'பாதுகாக்க வேண்டிய பொறுப்பு' என்ற கோட்பாட்டிலிருந்தும் தவறின.
இலங்கையின் 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' அறிக்கையை மட்டும் தங்கள் கவனத்தில் கொள்வதால், உலக அரசாங்கங்கள் மீண்டும் தங்கள் தார்மீக, மற்றும் நீதி சார்ந்த கடப்பாட்டிலிருந்து தவறியுள்ள தோற்றப்பாட்டைக் கொடுக்கின்றன. இவ்வறிக்கையை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளார்கள்.
தாயகத்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும் புலத்து தமிழர்களும் நிராகரித்துள்ளனர். மற்றும் சர்வதேச மனிதநேய அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு என்பன நிராகரித்துள்ளன.
அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் தனது பிந்திய ஊடகச்செய்தியில் போர்க்குற்றங்கள் பற்றி போதிய அளவு உள்ளடக்கப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளது.
தென் ஆபிரிக்கா தன் ஊடகச்செய்தியில் போர்க் குற்றமிழைத்தவர்கள் தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றி மேலும் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும் எனக் கூறியுள்ளது. யார் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார்களோ அக்குற்றவாளிகளே குற்றங்களை விசாரித்து நீதி வழங்குவதென்பது ஒரு தவறான வாதமாகும்.
எனவே 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' அறிக்கையை மாத்திரம் உலகின் முன்னணி அரசாங்கங்கள் சில கருத்தில் கொண்டு கருமமாற்றுவதென்பது, இலங்கையில் நடந்தேறிய போர்க்குற்றங்கள், மனிதாபிமானக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற முறைகேடுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகளாவிய ரீதியில் நீதிகேட்டு வேகம் கொள்ளும் அனைத்துலக அபிப்பிராயத்தை திசைதிருப்பும் முயற்சியென்றே கருதுகிறோம்.
இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தே ஆகவேண்டுமென இந்த சர்வதேச செயற்பாட்டாளர்கள் கருதினால், 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' அறிக்கையை கருத்திலெடுக்கும் அதே சமயம், எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணயக் கூட்டத் தொடரின்போது இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவது காலத்தின் தேவையாகும்.
இதனையே, உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும் விதந்துரைத்துள்ளது. இலங்கை விசாரணைக் குழு ஒன்றை அமைத்து முறைப்படி விசாரணைகளை முன்னெடுக்கும் அதேவேளை, சர்வ தேசமும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக விசாரணைக் குழு அமைத்து செயற்பட வேண்டும் என்பதே நிபுணர் குழுவின் அறிவுரை ஆகும்.
ஒன்று அல்லது மற்றய விசாரணைக்குழு என்று அல்லாமல் இரு குழுக்களுமே போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென்பதே நிபுணர் குழுவின் சிபார்சு ஆகும்.
எனவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின்போது இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற வழிசெய்யும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரம் கொண்டவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
மேலும் மேற்கூறப்பட்ட சர்வ தேச மனிதநேய அமைப்புக்களினால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் காரணமாக, அமையவிருக்கும் சர்வதேச விசாரணைக் குழுவிற்கு 'கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க சபை' சமர்ப்பித்துள்ள அறிக்கையின் சகல அம்சங்களையும் பரிசீலனை செய்யும் அதிகாரமும் அளிக்கப்படவேண்டும் என்பதும் எமது பெருவிருப்பாகும்.
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்


No comments:
Post a Comment