மேற்குலக நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் இலங்கைக்கு அந்நாடுகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன, அநீதி இழைக்கின்றன என்று அமெரிக்க இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேரடியாகவே குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக், பொதுமக்கள் பாதுகாப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் மரியா ஒட்டேரோ ஆகியோர் நேற்று முன்தினம் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்படி குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
மேலும் இந்தக் கலந்துரையாடலின்போது அமெரிக்க இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றோம். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறெல்லாம் மேற்கொண்ட போதிலும் மேற்குலக நாடுகள் எமக்கு அநீதியையே இழைக்கின்றன.
மேற்குலக நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் எமக்கு அந்நாடுகள் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன, அநீதி இழைக்கின்றன. என்று அவர் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment