இலங்கை அரசுட்ன் நடத்தப்படும் பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாட்டை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்வைத்து ஆராயலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வருகிறது.
ஆனால் இலங்கை அரசாங்கமோ தெரிவுக்குழு மூலமே எந்தவொரு தீர்வுத்திட்டம் குறித்தும் பேசமுடியும் என்று கூறியுள்ளதுடன், தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்காதவரை அவர்களுடன் பேசப்போவதில்லை என்றும் கூறியுள்ளது.
இந்தநிலையில், முதலில் இலங்கை அரசு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் நடத்தப்படும் பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாட்டை தெரிவுக்குழு முன்வைத்து ஆராய்வதே பொருத்தமானது என்று அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.
நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்,
“சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்கள், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்களுக்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும்.“ என்று கூறியுள்ளார்.
அத்துடன் “இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்கள் நல்லமுறையில் நிறைவுபெற அமெரிக்கா உதவும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுக்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாட முடியும்.“ என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுக்கள் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா வெளியிட்டுள்ள ஆதரவு, இலங்கை அரசுக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.


No comments:
Post a Comment