மட்டக்களப்பிலிருந்து 600 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உருவான தாழமுக்கம் நேற்று முதல் சூறாவளியாக உருவாகி யுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சுமிந்திர டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
இச்சூறாவளி நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து 850 கிலோமீற்றர்களுக்கு அப்பால் வட கிழக்காக காணப்பட்ட தாகவும் அவர் கூறினார். இதன் காரணத்தினால் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் வரையான கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இக்கடற்பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலில் ஈடுபடுவதை மீனவர்களும், கப்பல் பணியாளர்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய நிலையில் இச்சூறாவளி இலங்கையை ஊடறுக்காது. என்றாலும் எதிர்வரும் 29ம் திகதி இந்தியாவின் வட தமிழ் நாடு, ஆந்திரா மாநிலங்களை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது மணித்தியாலத்திற்கு 10-15 கிலோ மீற்றர்கள் வேகத்தில் நகருகின்ற இச்சூறாவளிவலுவடைந்து வருகின்றது. இச்சூறாவளி காரணமாக வடக்கு- கிழக்கு ஆழ் கடல் பரப்பும் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது.
இச்சூறாவளி இலங்கையை நேரடியாகத் தாக்காவிட்டாலும் காற்றின் வேகம் வடக்கு, கிழக்கில் அதிகரித்து காணப்படும். அத்தோடு வடக்கு, கிழக்கு, வடமத்தி, வட மேல் மாகாணங்களிலும் மழை பெய்யும்.
No comments:
Post a Comment