காலங்களில் அவள் வசந்தம், கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே, நிலவே என்னிடம் நெருங்காதே, நெஞ்சம் மறப்பதில்லை, மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் மற்றும் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் போன்ற என்றென்றும் நினைவில் இருக்கும் பாடல்களைப் பாடி மக்களை மனம் மகிழச் செய்த கலாநிதி பீ.பி. ஸ்ரீநிவாஸ் என்ற சாதனைப் படைத்த பாடகரை இன்றைய சினிமா உலகம் மறந்துவிட்டாலும் அவர் என்றுமே தனது அபிமான நேயர்களின் மனதில் நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறார்.
பொதுவாக ஊடகங்கள், ஒரு கலைஞன் மறைந்த பின்னரே அந்த கலைஞனைப் பற்றி புகழ் பேணி அந்த மரணச் செய்தியை தெரிவிப்பதன் மூலம், தங்கள் ஊடகங்களை பிரபல்யப்படுத்திக் கொள்வதுண்டு. பீ.பி. ஸ்ரீநிவாஸ் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளப் பாடல்களைப் பாடி புகழ் உச்சியில் வீற்றிருக்கிறார்.
இவர் அன்று கொடிகட்டிப் பறந்த தமிழ் திரையுலகின் கதாநாயர்களான எம்.ஜி. ராமசந்திரன் மற்றும் சிவாஜி கணேசனுக்காக நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி திரைப்பட ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கிறார்.
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் கண்ணதாசனின் வரிகளுக்கு பாவமன்னிப்பு படத்திற்காக ஸ்ரீநிவாஸ் பாடிய காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி என்ற பாடல் தமிழ் நாட்டின் ரசிகர்களை பித்துப் பிடிக்க வைத்த ஒரு பாடலாக சாதனைப் படைத்தது. அன்று எவரைப் பார்த்தாலும் அந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பார்கள்.
திரைப்பாடல்களுடன் நின்றுவிடாமல், இந்த சாதனையாளர் பக்திப் பாடல்களைப் பாடி தென்னிந்தியாவின் தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றினார்.
கலாநிதி பீ.பி. ஸ்ரீநிவாஸ் அன்றும் இன்றும், என்றும் காஷ்மீர் தொப்பியை அணிந்திருப்பார். இதுவே அவரது அடையாளச் சின்னமாக இருக்கின்றது.
No comments:
Post a Comment